ஏலத்தில் புதிய சாதனை படைத்த கார் இதுதான்... ஜேம்ஸ் பாண்ட் படத்தால் கிடைத்த வெற்றி!
உலகிலேயே அதிக விலையில் ஏலத்தில் விற்பனையான கார்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் சிறப்புகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகில், என்னதான் புதிய கார்களுக்கு அதிக கிராக்கி நிலவி வந்தாலும், பழைய கிளாசிக் ரக கார்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். அதிலும், திரைப்பட பிரபலம் பயன்படுத்திய கார் என்றால் சொல்லவா வேண்டும். அதன் மதிப்பு ஏகபோகமாக இருக்கும்.

அந்தவகையில், உலகளவில் மிகவும் பிரபலமான ஓர் படத்தில் பயன்படுத்தப்பட்ட 1965 ஆஸ்டன் மார்ட்டின் டிபி5 மாடல் கார், அதன் மதிப்பைவிட பல மடங்கு அதிக விலைக்கு ஏலம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு கார் விற்பனையாக, அப்படி எந்த படத்தில் அந்த கார் பயன்படுத்தப்பட்டது என்று தானே கேட்கிறீர்கள். அது வேற யாரும் இல்லைங்க, உலகளவில் மிகவும் பிரபலமான நம்ம ஜேம்ஸ் பாண்ட் படத்துலதான் இந்த கார் பயன்படுத்தியிருக்காங்க.

இந்த கார் சுமார் 4,000,000 என்ற அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனையாகும் என எண்ணப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட விலையைக் காட்டிலும், கூடுதல் மதிப்பில் அது விற்பனையாகியுள்ளது. அந்தவகையில், 6,385,000 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பனையாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 45 கோடிக்கும் அதிகமான விலையாகும்.

இந்த சிறப்பான சம்பவம், அமெரிக்காவில் உள்ள மான்டேரி என்ற நகரத்தில் அரங்கேறியுள்ளது. புகழ்பெற்ற ஏல நிறுவனமான ஆர்எம் சோதேபிஸ்தான் இந்த காரை ஏலம் விட்டுள்ளது.
ஆர்எம் சோதேபிஸ் நிறுவனம், நேற்றைய தினம் 'ஈவ்னிங் வித் ஆஸ்டன் மார்ட்டின்' என்ற பெயரில் இந்த ஏல நிகழ்வை நடத்தியது.

இதுபோன்ற நிகழ்வை இந்நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்துவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில் நேற்றைய தினம், ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான 1965 ஆஸ்டன் மார்ட்டின் டிபி5 மாடல் ஏலம் விடப்பட்டது.

இந்த கார், உலகளவில் புகழ்வாய்ந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காராகும். இந்த காரை, முன்னதாக 1,765,000 என்ற அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், தற்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் இயக்குநர் லகோண்டா கூறியதாவது, "கார் மற்றும் பயண பிரியர்கள் மத்தியில் பிரிட்டிஷ் கார் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உலகளவில் நல்ல எதிர்ப்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிசெய்யும்வகையில் இந்த ஏலத்தின் முடிவு இருக்கின்றது." என கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "ஆர்எம் சோத்பிஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த வருடம் எங்களது காலண்டரில் மறக்க முடியாத நாளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதேபோன்ற வரவேற்பையும், விற்பனையையும் வரும் காலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என தெரிவித்தார்.

அதேசமயம், இந்த கார் அதிக மதிப்பில் விலைக்குப்போக அந்த காரின் சிறப்பான தோற்றமும், பொறியியல் திறனும் முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, ஸ்போர்ட்ஸ் கார் உலகில், ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் உச்சத்தில் நிற்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையிலேயே அமெரிக்காவில் நடைபெற்ற ஏலம் இருப்பதாக வாகனத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் இந்த டிபி5 கார்குறித்த மற்ற முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பிரபல ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக பிரத்யேகமாக சில மாறுதல்களுடன் வடிவமைக்கப்பட்ட கார் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அதேசமயம், இந்த பழைமை வாய்ந்த கார் சிறப்பான கன்டிஷனில் இருப்பதும் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








