தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ட்ராக்ஸ் மற்றும் குர்கா எஸ்யூவி மாடல்களை பிஎஸ்6-க்கு இணக்கமாக தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாகவே ஈடுப்பட்டு வந்தது. தற்போது இதன் தயாரிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த கார்களை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதன் விபரங்களையும் சோதனை ஓட்ட புகைப்படங்களையும் இந்த செய்தியில் பார்ப்போம்.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த கார்கள் பொதுமக்கள் அதிகம் உள்ள சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மெர்சிடிஸ் ஜி-வேகன் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஃபோர்ஸ் குர்கா ஆஃப்-ரோட்டிற்கு மிகவும் உகந்த வாகனமாகும். இதன் தோற்றம் மகிந்திரா தார் மாடலின் வடிவில் புதிய தலைமுறைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் பெரியளவில் தகவல்கள் கிடைவில்லை எனினும், இந்த ஃபோர்ஸ் குர்கா காரில் முந்தைய மாடலை விட பெரிய க்ரில், வட்ட வடிவிலான பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய டிசைனில் பம்பர் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
பாக்ஸ் வடிவிலான தோற்றம், எளிமையான பின்புறம் போன்றவை முந்தையை மாடலில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற எஸ்யூவி கார் என்பதால் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவிலும் எந்த மாற்றத்தையும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவில்லை.

தற்சமயம் விற்பனையாகி வரும் குர்கா எஸ்யூவியில் மிகவும் குறைவான உட்புற அப்டேட்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் விரைவில் வெளியாக இருக்கும் இதன் பிஎஸ்6 மாடலின் முன்புறத்தில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளதால், இந்த காரின் உட்புறத்திலும் மிகவும் தேவையான சில அம்சங்களை ஃபோர்ஸ் நிறுவனம் கண்டிப்பாக வழங்கியிருக்கும் என நம்பலாம்.

அதாவது தொலைத்தூரம் செல்ல ஏற்ற வகையில் இந்த காரின் டேஸ்போர்டு, ஸ்டேரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்ற பாகங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். குறைந்தது, தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையாவது இந்த காரில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மாடலான ஃபோர்ஸ் ட்ராக்ஸ் கார் அதிக பயணிகள் செல்வதற்கு ஏற்றாற்போல் பெரிதான வீல்பேஸ் மற்றும் நிறைய இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இந்த இரு வாகனங்களிலும் க்ராஷ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வலிமையான ஏணி வடிவிலான சேசிஸ் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபோர்ஸ் நிறுவனம் தனது வழக்கமான மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினிற்கு பதிலாக தனது சொந்த நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.6 லிட்டர் டீசல் என்ஜினை குர்கா மாடலில் பொருத்தியுள்ளது. இந்த 2.6 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜினை புதிய ட்ராக்ஸ் மாடலிலும் எதிர்பார்க்கலாம்.
டூஃபான், க்ரூஸர் மற்றும் காமா என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாக இருக்கும் ட்ராக்ஸ் மாடலுக்கு இந்திய சந்தையில் கடுமையாக போட்டியளிக்கும் மாடலாக மஹிந்திரா பொலிரோ கார் விளங்குகிறது. தற்சமயம் முழுவதும் தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கும் ஃபோர்ஸின் இந்த அப்டேட் மாடல் அடுத்த துவக்கத்திலேயே விற்பனையை துவங்கிவிடும் என தெரிகிறது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு ஃபோர்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளாக பட்ஜெட் வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வகையிலான தயாரிப்புகளை தான் வாடிக்கையாளர்களும் இந்நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதன் விற்பனை நிலவரத்தை பொறுத்தே ஃபோர்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








