சோதனை ஓட்டத்தின்போது தீப்பிடித்து எரிந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்... சென்னை அருகே பரபரப்பு
சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி விளங்குகிறது. பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் புதிய மாற்றங்களுடன் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்த புதிய மாடல் நாட்டின் பல்வேறு இடங்களில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகளில் கிடைக்கும் தரவுகளை வைத்து இந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அருகே புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் ஒன்று நேற்று மாலை சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுனர், அந்த காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மஹிந்திரா வேர்ல்டு சிட்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது. அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறக்கப்பட இருக்கிறது.

தற்போதைய மாடலைவிட மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். அதாவது, இதன் புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் நீள, அகலத்திலும் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையிலேயே இதுவரை தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட மிகவும் கம்பீரமாகவும், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருவதால், ஸ்கார்ப்பியோ பிரியர்களையும், எஸ்யூவி கார் வாங்க இருப்போர் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








