திருப்பதி சென்று விட்டு ஊர் திரும்பிய 3 பேரின் உயிரை பறித்தது இதுதான்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்...
திருப்பதி சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமகிருஷ்ணன் - சரஸ்வதி. இவர்களுக்கு 4 வயதில் ஷக்சிதா என்ற மகள் இருந்தார். இந்த சூழலில், மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்று வர ராமகிருஷ்ணன் முடிவு செய்தார்.
அவர்களுடன் ராமகிருஷ்ணனின் உறவினரான செல்வம் என்பவரும் இணைந்து கொண்டார். செல்வமும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்தான். அங்குள்ள அருணா தியேட்டர் பகுதியில் செல்வம் வசித்து வந்தார். இவர்கள் 4 பேரும் ஒன்றாக இணைந்து திருப்பதிக்கு சென்றனர்.

பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு, கார் ஒன்றில் மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி கிளம்பினர். அவர்கள் 4 பேரும் நேற்று முன் தினம் இரவு (மார்ச் 7ம் தேதி) திருப்பதியில் இருந்து புறப்பட்டனர். ராமகிருஷ்ணன் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
இந்த சூழலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் (மார்ச் 8ம் தேதி), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. இது கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையாகும்.
அப்போது திடீரென தாறுமாறாக ஓடிய கார், சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில், சரஸ்வதி, ஷக்சிதா மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். விபத்து நிகழ்ந்தவுடன் அங்கு இருந்த மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மக்கள் அளித்த தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்த செல்வம் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததாகவும், படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் ராமகிருஷ்ணன் நாளிதழ் விற்பனை ஏஜெண்டாக பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.
இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராமகிருஷ்ணன் காரை தூக்க கலக்கத்தில் ஓட்டி வந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகவே கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற விதிமுறை மீறல்களே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இதுதவிர தூக்க கலக்கத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற காரணங்களாலும் அதிகப்படியான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. எனவே இத்தகைய விபத்துக்களை தவிர்க்க என்ன செய்யலாம்? என்பது குறித்து இனி பார்க்கலாம்.
பெரும்பாலும் அதிகாலை நேரங்களில்தான் தூக்க கலக்கம் காரணமாக அதிக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. எனவே கூடுமானவரை அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.
குறிப்பாக நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை வாகனங்களை இயக்க வேண்டாம். ஏனெனில் இது தூங்குவதற்கான நேரம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நீண்ட தூர பயணம் அல்லது குறுகிய தூர பயணம் என எதுவாயினும், வாகனங்களை இயக்குவதற்கு முன்பாக நன்கு ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். இதன்மூலம் வாகனம் இயக்கும்போது சோர்வு ஏற்படுவதையும், தூக்கம் வருவதையும் தவிர்க்க முடியும்.

ஆனால் அப்படி வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கும்போது, பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் என்றால், மாற்று டிரைவருடன் பயணிப்பது நல்லது.
2 மணி நேரங்களுக்கு ஒரு முறை இருவரும் மாற்றி மாற்றி வாகனத்தை இயக்கலாம். ஒருவர் வாகனத்தை இயக்கி கொண்டிருக்கும்போது மற்றொருவர் நன்கு ஓய்வு எடுக்கலாம். அதேபோல் அதிவேகமாக வாகனத்தை இயக்காதீர்கள்.
நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதை விட பாதுகாப்பாக சென்று சேர்வதே முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் மது அருந்துவதை தவிர்த்து விடுவதும் நல்லது. சிறிய அளவிலான ஆல்கஹால் கூட பெரும் சோர்வை ஏற்படுத்தி விடும்.


Click it and Unblock the Notifications









