ஆட்டோ எக்ஸ்போவில் 50 புதிய கார் மாடல்கள் அறிமுகமாகிறது
ஆட்டோ எக்ஸ்போவில் 50 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக வெளியானத் தகவல், பார்வையாளர்கள் மத்தியில் இப்போதே ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடத்தப்படுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து வந்த மோட்டார் கண்காட்சி, கடந்த இரண்டு முறையாக இடவசதியை கருத்திக் கொண்டு கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியில் இந்தியாவில் செயல்படும் பல முன்னணி கார், பைக் நிறுவனங்களும், உதிரிபாக தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துவது வழக்கம்.

வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் 15வது சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிற்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மோட்டார் கண்காட்சியை பார்வையிடுவதற்காக லட்சக்கணக்கானோர் வருகை தருவர். இதற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளை ஆட்டோ எக்ஸ்போ ஏற்பாடு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 5ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கண்காட்சியும் வாகன பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த கண்காட்சியில் 50 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், இந்த ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு இணையாக புதிய பைக் மாடல்களும் வெளியிடப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார், பைக்குகள் குறித்த விபரங்களை பெறும் வாய்ப்பு இந்த மோட்டார் கண்காட்சிக்கு மூலமாக தெரிய வரும் என்பதால், ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களும் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார் மாடல்களை வைத்து தங்களது கார் வாங்கு திட்டத்தை 26 சதவீத பார்வையாளர்கள் முடிவு செய்கின்றனராம். ஏற்கனவே திட்டமிட்டிருப்பவர்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார் மாடல்களை வைத்து தங்களது முடிவை அல்லது கார் மாடலை மாற்றுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்திய கார், பைக் வாங்குவோர் மத்தியில் இந்த ஆட்டோ எக்ஸ்போ முக்கிய காரணியாக இருக்கும் என்பதால், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.

அதேநேரத்தில், நிஸான், ஜீப், பிஎம்டபிள்யூ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போவிற்கான செலவீனத்தை மனதில் வைத்து பங்குகொள்ளவில்லை. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய மின்சார வாகனங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, எஸ்யூவி கார்களின் ஆதிக்கமும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Source: NDTV Auto


Click it and Unblock the Notifications








