பிரம்மாண்ட வளர்ச்சியுடன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா...
இரண்டாவது தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா கார் பிரம்மாண்ட வளர்ச்சியுடன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரண்டாவது தலைமுறை எர்டிகா காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதலே புதிய மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில், அதாவது கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 6,362 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்தது. அதன்பின் வந்த டிசம்பர் மாதத்தில், மாருதி சுஸுகி எர்டிகா கார்களின் விற்பனை 7,155ஆக அதிகரித்தது.

அதேபோல் 2019ம் ஆண்டின் தொடக்க மாதங்களிலும் 7 சீட்டர் எம்பிவி காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் விற்பனை சிறப்பாகவே இருந்தது. 2019ம் ஆண்டின் முதல் இரு மாதங்களான ஜனவரி மற்றும் பிப்ரவரியில் முறையே 6,352 மற்றும் 7,975 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதத்தில், இரண்டாவது தலைமுறை எர்டிகா கார்களின் விற்பனை 8 ஆயிரம் யூனிட்களுக்கு நெருக்கமாக வந்த நிலையில், அதன்பின் வந்த மார்ச் மாதத்தில், முதல் முறையாக 9 ஆயிரம் யூனிட்களை நெருங்கியது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 8,955 புதிய தலைமுறை எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்தது. அதன்பின் வந்த ஏப்ரல் மாதத்தில், 8,087 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் கடந்த மே மாதத்தில், 8,864 எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 82 சதவீதம் அதிகம் ஆகும். ஏனெனில் 2018ம் ஆண்டு மே மாதத்தில் 4,872 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

இந்த சூழலில் இந்தியாவில் 50 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லையும் இரண்டாவது தலைமுறை எர்டிகா தற்போது எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சமீப காலமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையே பல்வேறு காரணங்களால் தடுமாறி வருகிறது.

குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன. ஆனால் எர்டிகாவின் விற்பனை மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக இருந்து வருவது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை எர்டிகா கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட எஸ்எச்விஎஸ் டெக்னாலஜியுடன் கூடிய 1.5 லிட்டர் கே15பி நான்கு-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ரூ.7.44 லட்சம் முதல் 10.90 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் எர்டிகா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








