புது வித ஆசிட் தாக்குதலால் பெரும் பரபரப்பு.. கார் உரிமையாளர்களின் கடும் அதிர்ச்சிக்கு காரணம் இதுதான்
கார்கள் மீது நடத்தப்பட்டு வரும் புது வித ஆசிட் தாக்குதல், கார் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக கார்களை சேதப்படுத்தும் போக்கு இந்தியாவில் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. லோகோக்களை பிரித்து எறிவது, கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது, கீறல்கள் இடுவது என பல்வேறு வழிகளில் கார்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த கார்களை சேதப்படுத்தும் போக்கு அதிகமாக இருந்து வருகிறது. விலை உயர்ந்த கார்கள் சேதமடைந்தால், அதனை சரி செய்ய அதிக செலவு ஆகும். இந்த சூழலில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கார்களை சேதப்படுத்தும் போக்கு இந்தியாவில் புதிய வடிவம் எடுத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள வசந்த் குனுஜ் பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கார் உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, டாடா டிகோர், மினி கூப்பர் எஸ் போன்ற கார்கள் அங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், வழக்கத்திற்கு மாறாக ஆசிட் அல்லது அதைப்போன்ற ரசாயனங்களை கொண்டு கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வசந்த் குனுஜ் என்பது டெல்லியின் ஆடம்பரமான ஏரியாக்களில் ஒன்றாகும்.

அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தபோது, இரவு நேரத்தில் மர்ம நபர்கள் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கார்களை சேதப்படுத்தியதற்கு என்ன காரணம்? என்பது உறுதியாக தெரியவில்லை.

அனேகமாக கார்களை பார்க்கிங் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துரதிருஷ்டவசமாக கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வேறு இல்லை.

சிசிடிவி கேமராக்கள் இருந்திருந்தால், குற்றவாளிகளை அடையாளம் கண்டிருக்க முடியும். அத்துடன் அவர்கள் ஏன் இந்த செயலை செய்தனர்? என்ற கேள்விக்கான விடையும் கிடைத்திருக்கும். தலைநகர் டெல்லியில் இட நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அங்கு கார்களை பார்க்கிங் செய்ய போதிய இட வசதி இல்லை. இதன் காரணமாக சாலைகளிலேயே பலர் தங்கள் கார்களை பார்க்கிங் செய்கின்றனர். பலருக்கு நிலையான பார்க்கிங் இடமும் இல்லை. கிடைத்த இடங்களில் தங்கள் கார்களை பார்க்கிங் செய்து விடுகின்றனர்.

எனவே கார்களை பார்க்கிங் செய்வது தொடர்பாக உரிமையாளர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே மர்ம நபர்கள் பயன்படுத்திய திரவம் எது? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் ஆசிட் தவிர, பெயிண்ட் ரிமூவல் ஸ்பிரே (Paint Removal Sprays) மற்றும் ப்ரேக் ப்ளூயிட் (Brake Fluid) ஆகியவற்றையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இவை இரண்டும் மார்க்கெட் மற்றும் ஆன்லைனில் மிக எளிதாக கிடைக்க கூடியவை.

இதுபோன்ற சேதங்களை சரி செய்ய ரீ பெயிண்டிங் ஒன்றே சரியான தேர்வு. இத்தகைய சேதாரங்களில் இருந்து கார்களை காப்பாற்ற முடியுமா? இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியுமா? என்பது போன்ற தகவல்களை இனி பார்க்கலாம்.

இத்தகைய சேதாரங்களில் இருந்து உங்கள் கார்களை பாதுகாக்க முடியுமா?
பாதுகாப்பான இடங்களில் கார்களை பார்க்கிங் செய்வது மட்டுமே இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு. உங்கள் ஆளுமைக்கு உட்பட்ட பத்திரமான இடத்தில் பார்க்கிங் செய்வதன் மூலம் கார்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ள முடியும்.

ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நன்கு வளர்ச்சியடைந்த நகரங்களில் இது சற்று இயலாத காரியம்தான். அங்கெல்லாம் ஒரு வீட்டிற்கு தற்போது இரண்டு கார்கள் என்றாகி விட்டன. எனவே கார்களை பார்க்கிங் செய்வதற்கான இட வசதி குறைந்து கொண்டே வருகிறது.

அதே நேரத்தில் இத்தகைய ரசாயனங்களுக்கு எதிராக செராமிக் கோட்டிங் போன்ற கோட்டிங்குகள் எதுவும் பெரிதாக சோதித்து பார்க்கப்படவில்லை. எனவே இத்தகைய ரசாயனங்களிடம் இருந்து ஏதேனும் கோட்டிங் கார்களின் பெயிண்ட்டை பாதுகாக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

குற்றவாளிகளை எவ்வாறு கண்டறிவது?
பார்க்கிங் ஏரியாவில் பல்வேறு கோணங்களில் சிசிடிவி கேமராக்களை இன்ஸ்டால் செய்வது மட்டுமே இதற்கு இருக்கும் ஒரே தீர்வு. இதுதவிர ஹை-டெக் டேஷ் போர்டு கேமராக்களும் கூட மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அசைவை உணர்ந்தால் அவை உடனடியாக ரெக்கார்டிங்கை தொடங்கும்.

இதுபோன்ற ஹை-டெக் டேஷ்போர்டு கேமராக்களை காரின் முன் மற்றும் பின் பக்க விண்டு ஸ்க்ரீன்களில் பொருத்தி கொள்ளலாம். இத்தகைய குற்றாவளிகளை கண்டுபிடிக்க அவை உங்களுக்கு உதவி செய்யும்.

இன்சூரன்ஸ் பணம்?
காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், பெரும்பாலான இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் கவர் ஆகின்றன. ஆனால் கூடுதல் தெளிவு மற்றும் தகவல்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் நன்கு சோதித்து பார்க்க வேண்டும்.

இதுபோன்ற வழிகளில் உங்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக புகார் கொடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது போன்ற வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எப்ஐஆர் கேட்கின்றன.

இதனிடையே டெல்லியில் வாகனங்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்கிங் செய்யப்பட்டிருந்த தங்கள் வாகனங்கள் மீது இதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமீபத்தில் கூட மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். எனவே வாகன உரிமையாளர்கள் மத்தியில் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேற்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
Source: Teambhp


Click it and Unblock the Notifications








