அஸ்டன் மார்ட்டின் ரேஸிங் அகடமியில் இணைந்த பெங்களூர் வீரர்!
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் இளம் கார் பந்தய வீரர்களுக்கான பயிற்சி அகடமியில் (AMR) பயிற்சி பெறுவதற்கு பெங்களூரை சேர்ந்த இளம் வீரர் அகில் ரபீந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார் பந்தய வீரராக ஜொலிக்க வேண்டும் தீரா தாகத்தில் இருக்கும் திறமையான வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் முயற்சியில் அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனம் புதிய பயிற்சி அகடமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக சர்வதேச அளவில் இளம் வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியது.

தகுதியான இளம் வீரர்களை தேர்வு செய்வதற்காக சிறப்பு நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. இதில், லீமான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் மூன்று முறை வெற்றி பெற்ற ஜானி ஆடம், மேக்ஸிம் மார்ட்டின் ஆகியோர் இருந்தனர். மேலும், இறுதிக்கட்ட தேர்வில் அஸ்டன் மார்ட்டின் ரேஸிங் டீமின் முதல்வர் பால் ஹவர்த்தும் இணைந்தார்.

இதில், பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட திறன் சோதனைகளில் வெற்றி பெற்ற 23 இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அஸ்டன் மார்ட்டின் இளம் கார் பந்தய வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, லக்சம்பர்க், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 12 நாடுகளில் இருந்து இந்த 23 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பெங்களூரை சேர்ந்த 22 வயது நிரம்பிய அகில் ரபீந்த்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே வீரர் அகில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்டன் மார்ட்டின் இளம் கார் பந்தய வீரர்கள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 23 வீரர்களுக்கும் சீரிய பயிற்சி அளிக்கப்படும். அவர்களில் மிக திறமையும், தகுதியும் படைத்தவர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அஸ்டன் மார்ட்டின் கார் பந்தய அணியில் இளநிலை வீரராக ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்.

வேர்ல்டு என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அஸ்டன் மார்ட்டின் ரேஸிங் அணியில் ரிசர்வ் செய்யப்பட்ட வீரராகவும், எதிர்காலத்தில் வாய்ப்புகளை எளிதாக பெறும் வீரராகவும் வாய்ப்பளிக்கப்படுவார்.
ஈரோப்பியன் சீரிஸ் புரோஸ்போர்ட் பெர்ஃபார்மென்ஸ் கார் பந்தயத்தில் அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் ஜிடி-4 காருடன் பங்கேற்று வரும் அகில் ரபீந்த்ரா இந்த தேர்வு குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆசிய அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் ஆச்சரியமளிப்பதாக கூறினார்.

அத்துடன், நாட்டிற்காகவும், ஆசிய கண்டத்தின் சார்பிலும் பங்கேற்ப இருப்பது பெருமைக்குரிய விஷயமாகவும், அடுத்து வரும் காலம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அகிலுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications








