டாடா ஹாரியருக்கு போட்டியான ஸ்கோடா கரோக் எஸ்யூவி... இந்தியா அறிமுகம் எப்போது?
புதிய ஸ்கோடா கரொக் எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்திய மார்க்கெட்டில் வலுவான சந்தையை கைப்பற்றுவதற்கான திட்டத்தை ஸ்கோடா செயல்படுத்த இருக்கிறது. இதன் ஒருபகுதியாக பல புதிய மாடல்களை களமிறக்க இருக்கிறது. அதிலும், குறிப்பாக, எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட உள்ளது. அதில், ஒரு மாடலாக எதிர்பார்க்கப்படும் ஸ்கோடா கரோக் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களின் சந்தையை குறிவைத்து இந்த புதிய கரோக் எஸ்யூவியை ஸ்கோடா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. புதிய இறக்குமதி கொள்கையின் கீழ், முதல் 2500 கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

இந்த காருக்கு முதல்கட்டமாக கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வது குறித்து முடிவு எடுக்கப்பதற்கு ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இந்த சந்தையில் கடும் போட்டி இருப்பதால், எச்சரிக்கையாக அணுகுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கோடியாக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களை அதிக அளவில் பெற்றிருக்கிறது. எனவே, பார்ப்பதற்கு மினி கோடியாக் எஸ்யூவி போலவேதான் இருக்கிறது. இது 5 சீட்டர் மாடலாக இருக்கும்.

இந்த எஸ்யூவியில் 12.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும். வாய்ஸ் கன்ட்ரோல், வைஃபை வசதி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

வெளிநாடுகளில் இந்த காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில், 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சினுடன் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

வடிவமைப்பில் மிக நேர்த்தியாகவும், அசத்தலாகவும் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. தொழில்நுட்ப அம்சங்களிலும் போட்டியாளர்களை ஒருபடி விஞ்சி நிற்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








