இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.... சென்னை சாலைகளில் 'ஏஎன்பிஆர்' கேமராக்கள் பொருத்தம்!!
நாட்டிலேயே முதல்முறையாக போக்குவரத்த்து விதிமீறலில் ஈடுபடுவோரை எளிதாக கண்டுபிடிப்பதற்கான ஏஎன்பிஆர் கேமராக்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், விதிமீறினால் நிச்சயம் அபாரதம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே அதிக போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்கள் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களை தடுத்து, விபத்துக்களை குறைப்பதற்கான புதிய திட்டங்களை போலீசார் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்கான புதிய முயற்சியை போலீசார் கையில் எடுத்துள்ளனர். அதன்படி, சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா நகர் பகுதியில் திருமங்கலம், சாந்திக் காலனி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் 61 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, சென்னை கிழக்குக்கடற்கரை சாலையிலும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அக்கரை சோதனைச்சாவடி, நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைகளிலும் தற்போது ஏஎன்பிஆர் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் 217 ஏஎன்பிஆர் கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. சாதாரண கண்காணிப்பு கேமராவிலிருந்து இந்த "Automatic Number Plate Recognition" எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண் பலகையில் உள்ள பதிவு எண்ணை இந்த கேமராக்கள் துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். மேலும், தேசிய தகவல் ஆணையத்தின் சர்வருடன் இந்த கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரின் முகவரியை உடனடியாக கண்டுபிடித்துவிடும்.

இந்த தகவல்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன உரிமையாளரின் வீட்டு முகவரிக்கு அபாரத ரசீது அனுப்பப்படும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமின்றி, குற்றவாளிகளை எளிதாக கண்டறிவதற்கும் இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் பயன்படும் என்று சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத இடங்கள் மற்றும் சமயங்களில் இந்த கேமராக்கள் செவ்வனே தனது பணிகளை செய்யும். எனவே, எந்த நேரத்தில் பயணித்தாலும் இனி சிக்னல் ஜம்ப், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்போர், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் அதிவேகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் மூலமாக கையும் களவுமாக போலீசார் பிடித்துவிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டதன் பிறகு போக்குவரத்து விதிமீறல் மற்றும் இதர குற்றங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக காவல் துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கேமராக்கள் பொருத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதனால், போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிநவீன கேமராக்களை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








