அடுத்து ஒரு டெஸ்லா அதிகாரியை வளைத்து போட்ட ஆப்பிள் நிறுவனம்!
டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் உயர் அதிகாரியை ஆப்பிள் நிறுவனம் வளைத்து போட்டுள்ளது. இதனால், ஆப்பிள் கார் திட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் கார் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகின் தன்னிகரற்ற நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் உருவாக்கப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. டைட்டான் என்ற பெயரில் இந்த ஓட்டுனரில்லா கார் திட்டம் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆப்பிள் கார் திட்டம் துவங்கி பல ஆண்டுகள் ஆனாலும், அவ்வப்போது சில தடங்கல்கள் மற்றும் தடைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் டைட்டான் கார் திட்டம் மீண்டும் சூடிபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார கார் தயாரிப்பில் கொடி கட்டி பறக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரியை ஆப்பிள் கார் நிறுவனம் வளைத்து போட்டுள்ளது. டெஸ்லா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத்தின் மின்மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷன் தயாரிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியான மைக்கேல் செவ்கட்ச் என்ற பொறியாளரை ஆப்பிள் பணிக்கு அமர்த்தி இருக்கிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டெஸ்லா மாடல் 3 கார், புதிய தலைமுறை ரோட்ஸ்டெர் மற்றும் டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக் உருவாக்கப் பணிகளில் மைக்கேல் முக்கிய பங்காற்றியவர். இவரையே ஆப்பிள் நிறுவனம் வளைத்து போட்டுள்ளதாக எலெக்ட்ரெக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மின்சார கார்களுக்கான மின்மோட்டார், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கிய பாகங்களை உருவாக்கும் பணிகள் மற்றும் பார்க்வார்னர், ஜிகேஎன் டிரைவ்லைன் மற்றும் கெட்ராக் டிரான்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர். பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், போர்ஷே 918 ஸ்பைடர் ஹைப்பர் கார் உருவாக்கப்பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர்.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு திட்டங்களுக்கான குழுமத்தின் பொறியியல் பிரிவு மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் மூத்த கார் வடிவமைப்பு நிபுணர் ஆன்ட்ரூ கிம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் டக் ஃபீல்டு என்பவரையும் வளைத்து போட்டது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் உயர் மட்டத்தை அடியோடு வளைத்து போட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் டைட்டான் கார் திட்டத்தை நனவாக்க தீவிரமாக இறங்கி இருப்பது தெரிய வருகிறது. மேலும், ஆப்பிள் டைட்டான் கார் மின்சார மாடலாக வர இருப்பதும், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
Source:Electrek


Click it and Unblock the Notifications








