விற்பனை கடும் சரிவு... ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்!
விற்பனை மிகவும் மந்தமடைந்துவிட்டதால், நாடுமுழுவதும் உள்ள 5 ஆலைகளுக்கும் உற்பத்தி இல்லா நாட்களை அறிவித்துள்ளது அசோக் லேலண்ட். இது அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. கார், பைக், கனரக வாகனங்கள் என ஒட்டுமொத்த வாகனத் துறையுமே கடுமையான சரிவுப் பாதையில் இருக்கிறது. இந்த நிலையில், வாகனங்கள் இருப்பில் கணிசமாக தேங்கி வருவதால், உற்பத்தி இல்லா நாட்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

அந்த வகையில், மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தி இல்லா நாட்களை அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் நாடு முழுவதும் செயல்படும் 5 ஆலைகளுக்கு உற்பத்தி இல்லா நாட்களை அறிவித்துள்ளது.

இதுவரை கார், பைக் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை உற்பத்தி இல்லா நாட்களாக கடைபிடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால், அசோக் லேலண்ட் இந்த மாதம் பாதி நாட்களை உற்பத்தி இல்லா நாட்களாக கடைபிடிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் செயல்படும் எண்ணூர் ஆலையில் 16 நாட்களும், ஓசூரில் செயல்படும் ஆலையில் 5 நாட்களும் உற்பத்தி இல்லா நாட்களாக கடைபிடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதவிர்த்து, ராஜஸ்தானில் உள்ள ஆல்வால் ஆலையில் 10 நாட்களும், மும்பையின் பந்த்ரா பகுதியில் செயல்படும் ஆலையில் 10 நாட்களும், உத்தரகாண்ட் பாட்நகரில் செயல்படும் ஆலையில் 18 நாட்களும் உற்பத்தி இல்லா நாட்களை கடைபிடிக்க உள்ளது. இது இந்த மாதத்திற்கான அறிவிப்புதான். விற்பனை அதிகரிக்கவில்லை என்றால், அடுத்து வரும் மாதங்களிலும் இதே நிலை தொடரலாம்.

இந்த அறிவிப்பால் இந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். உற்பத்தி இல்லா நாட்கள் அனைத்தும் சம்பளம் இல்லா நாட்களாக கருதப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதனால் தற்காலிக தொழிலாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. சம்பளம் வராது என்பதுடன் வேலை பறிப்பிலும் நிர்வாகம் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதே இதற்கு காரணம். நிரந்தர தொழிலாளர்களுக்கும் சம்பளத்தில் பாதிப்பு இருக்கும். ஆனால், வேலைக்கு ஆபத்து இருக்காது என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், இந்த கடுமையான நெருக்கடியை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பினனரே நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இதே நிலை தொடர்ந்தால், பெரும் முதலீடு செய்திருக்கும் வாகன நிறுவனங்களும், அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் கடும் பாதிப்பை சந்திப்பது தொடர்கதையாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








