உலகின் பிரமாண்டமான எலக்ட்ரிக் கார் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த அசோக் லேலண்ட்: எதற்கு தெரியுமா...?
அசோக் லேலண்ட் நிறுவனம், உலகின் பிரமாண்டமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநரான எலன் முஸ்கின் கனவு நினைவாக இருக்கின்றது. அவரது கனவு மட்டுமில்லைங்க பெரும்பாலான இந்தியர்களின் கனவும் நனவாக இருக்கின்றது. எப்படினு கேக்குறீங்களா, ஆட்டோமொபைல்ஸ் துறையில் புரட்சியை ஏற்படுத்திய டெஸ்லா நிறுவனம், தானியங்கி எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் முன்னணி வகித்து வருகின்றது.

அதேசமயம், இந்த எலக்ட்ரிக் கார்கள் சொகுசு கார்களுக்கும் செம டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் நவீன வசதியிலும், ஸ்டைலான லுக்கிற்கும், உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோன்று, இந்த கார் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் மிக சிறப்பாக செயல்படுகிறது.

ஆனால், இந்த காரின் விற்பனையை டெஸ்லா நிறுவனம் இன்றளவும் இந்தியாவில் தொடங்கவில்லை என்பது பலரிடையே ஏமாற்றமாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான், டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர் எலன் முஸ்கிற்கு இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அழைப்பானது, டெஸ்லா தானியங்கி கார்களை இந்தியாவில் நுழைய வைப்பதற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் எதிர்பார்ப்பும், இந்தியர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற இருக்கின்றது. ஆனால், இன்னும் இவர்களின் இணைப்பு உறுதிச் செய்யப்படவில்லை. தற்போதுதான் இணைப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பின்வரும் காலங்களில்தான் இதுகுறித்த முழுமையான தகவல் நமக்கு கிடைக்கும்.

அதேசமயம், டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் நுழைவதற்கான பணியை அண்மைக் காலங்களாக மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், அந்த நிறுவனம் பல்வேறு ஏஜென்சிகளை, காரை இந்தியச் சந்தையில் நுழைய வைப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில்தான், அசோக் லேலண்ட் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், பேருந்து உட்பட பல்வேறு ஹெவி ரகத்திலான வாகனங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த நிறுவனத்தின் வாகன விற்பனையானது, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 10 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், டொமஸ்டிக் வாகனம் 13,141 யூனிட்களும், கமர்சியல் ரக வாகனங்கள் 11,951 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன.

எலன் முஸ்க் நீண்ட நாட்களாக இந்திய சந்தையில் நுழைவதற்காக எதிர்பார்த்து வந்தநிலையில், மிகப்பெரிய ஜாம்பவானின் உதவி கரம் நீட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனம், இந்தியாவில் நுழைவதற்கான சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிறுவனம் இந்தியாவில் நுழையுமானால், அதன் மாடல் 3 தானியங்கி காரைதான் முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. ஆகையால், டெஸ்லா நிறுவனம் இந்திய நுழைவிற்கு பின் அதன் மாடல் 3 முதலில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த டெஸ்லா நிறுவனம், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை துவங்கியுள்ளது. அமெரிக்காவை அடுத்து முதல் முறையாக, அதாவது சொந்த நாட்டை விட்டு வெளியே அமைக்கும், முதல் உற்பத்தி தொழிற்சாலையாக இது இருக்கின்றது.

இந்த உற்பத்தி தொழிற்சாலை மூலம் வருடம் ஒன்றிற்கு 5 லட்சம் டெஸ்லா கார் யூனிட்களை உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்படும் கார்களை உலகின் பல்வேறு முக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. டெஸ்லாவின் இந்த புதிய உற்பத்தி தொழிற்சாலையானது, அமெரிக்காவில் இயங்கி வரும் தொழிற்சாலையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகளவில் உற்பத்தி செய்யும் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








