ஆச்சரியம்... வெறும் 24 மணி நேரத்தில் 10 நாடுகளை கடந்து சென்ற எலெக்ட்ரிக் கார்... எப்படி என தெரியுமா?
ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று வெறும் 24 மணி நேரத்தில் 10 நாடுகளை கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் கூட, பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.

இந்தியாவை பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையும் வெகுவாக குறையும் என்பதால், மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களுக்கு இன்னும் ஒரு சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்களில் மிக வேகமாகவும், அதே சமயம் அதிக தொலைவு பயணிக்க முடியுமா? என்பது மக்களின் முக்கியமான சந்தேகங்களில் ஒன்று. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால், தொலை தூர பயணங்களின்போது உடனடியாக எரிபொருள் நிரப்பி கொண்டு செல்லலாம். எரிபொருள் நிரப்ப 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால், அதனை சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் ஏற அவை அதிக நேரம் எடுத்து கொள்ளும் என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொலை தூர பயணங்களுக்கு உகந்தது அல்ல என்ற கருத்து நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஆடி இ-ட்ரான் (Audi e-tron) எலெக்ட்ரிக் கார் வெறும் 24 மணி நேரத்தில், அதாவது ஒரே நாளில் 10 நாடுகளை கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!! இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அத்துடன் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் தொலை தூர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பயணம் சுலோவேனியாவில் தொடங்கியது. நெதர்லாந்தில் முடிவடைந்தது. இந்த பயணத்தில் மொத்தம் 10 நாடுகளை வெறும் 24 மணி நேரத்தில் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்திருப்பதால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

பயணம் தொடங்கிய மற்றும் முடிவடைந்த சுலோவேனியா மற்றும் நெதர்லாந்து தவிர ஆஸ்திரியா, இத்தாலி, லிச்டென்ஸ்டெய்ன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லக்ஸம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கும் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பயணம் செய்துள்ளது. இந்த பயணத்தில் 1,600க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களை ஆடி இ-ட்ரான் கவர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் இடையிடையே சார்ஜ் செய்ய நீண்ட நேரம் ஆகியிருக்குமே? இது எப்படி சாத்தியம்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஏனெனில் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். அவ்வாறெனில் 1,600 கிலோ மீட்டர்களுக்கு 4 முறை சார்ஜ் செய்தாக வேண்டும்.

பொதுவாக வழக்கமான சார்ஜர்களை பயன்படுத்தினால், எலெக்ட்ரிக் கார்கள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் ஏற 6,7 மணி நேரங்கள் ஆகலாம். இந்த நேரம் கார் மாடல்களை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காருக்கு அதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கை கொடுத்துள்ளது.

இந்த டெக்னாலஜி மூலம் வெறும் 1 மணி நேரத்திற்கு உள்ளாக 150 kW வரை சார்ஜ் செய்ய முடியும் என்பதால், சார்ஜ் ஏற மிக குறைவான நேரமே எடுத்து கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 10 நாடுகளை கடந்து ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. அத்துடன் இது தொலை தூர பயணங்களுக்கும் ஏற்ற எலெக்ட்ரிக் கார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. அனேகமாக நடப்பு ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








