ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!
டெல்லி அருகே குர்கானில் இன்று நடந்து வரும் நிகழ்ச்சியில் ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் சொகுசு கார் இந்தியாவில் இன்று இரண்டாவது முறையாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் நிகழ்ச்சியிலிருந்து கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இ ட்ரான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இன்று நடந்து வரும் நிகழ்ச்சியில் மீண்டும் ஆடி ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 4.9 மீட்டர் நீளம் கொண்டது. ஆடி நிறுவனத்தின் பிரபலமான க்யூ-7 மற்றும் க்யூ-5 கார்களுக்கு இடையிலான ரகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2.9 மீட்டர் என்பதும் கவனிக்கத்தக்கது. 660 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி இ ட்ரான் காரில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், 20 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. 10 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம், பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் இரண்டு மின் மோட்டார்கள் மூலமாக இயங்குகிறது. முன்புறத்தில் 125kW மோட்டாரும், பின்புறத்தில் 140kW மோட்டாரும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது.

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மூன்று விதமான சார்ஜர்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். ஏர் சஸ்பென்ஷன் இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். முழு சார்ஜ் செய்யப்பட்டால், 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி வகையிலான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

அடுத்த சில மாதங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 200 இ ட்ரான் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் சொகுசு ரக கார் சந்தையில் களமிறங்கும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக வர இருக்கிறது. வெளிநாடுகளில் ஜாகுவார் ஐ-பேஸ், டெஸ்லா மாடல் எக்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








