ஆடி இ- ட்ரான் மின்சார சொகுசு கார் இந்திய அறிமுகம் எப்போது?
புதிய ஆடி இ- ட்ரான் மின்சார சொகுசு கார் வரும் ஜூன் 27-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆடி சொகுசு கார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இ- ட்ரான் அறிமுகம் செய்யப்பட்டது. க்ராஸ்ஓவர் டிசைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில், இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக இந்த புதிய மின்சார கார் வரும் 27ந் தேதி இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஆடி எஸ்யூவி கார்களின் டிசைன் சாயல்களுடன் க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது மின்சார கார் மாடல் என்பதற்காக வடிவமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எண்கோண வடிவிலான பிரம்மாண்ய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த க்ரில் அமைப்பு முன் ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டாரை குளிர்விக்கும் வகையில் திறந்து மூடும் அமைப்புடன் இருப்பது முக்கிய விஷயம்.

பின்புறம் தாழ்ந்து செல்லும் க்ரில் அமைப்பு, மிரட்டலான அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், ஆடி க்யூ வரிசை எஸ்யூவி மாடல்களை போன்ற தோற்றத்திலேயே தெரிகிறது.

இந்த மின்சார காரில் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் 125 kW திறன் வாய்ந்ததாகவும், பின்புற ஆக்சிலில் இருக்கும் மின் மோட்டார் 14 kW திறன் வாய்ந்ததாகவும் இருக்கிறது. மொத்தமாக 335 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பூஸ்ட் மோடில் வைத்து சென்றால் இந்த மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரை வாரி வழங்கும்.

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். பூஸ்ட் மோடில் இயக்கினால் 5.7 வினாடிகளில் தொட்டுவிடும்.

இந்த காரில் 436 செல்களுடன் 36 பிரிவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்த பேட்டரி தரை தளத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி தொகுதி 699 கிலோ எடை கொண்டது. இந்த பேட்டரி 95kW திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டேஷ்போர்டில் மூன்று திரைகள் மூலமாக காரின் முக்கிய வசதிகளை கட்டுப்படுத்தவும்,வேண்டிய தகவல்களை பெறவும் முடியும். இந்த காரில் சைடு மிரர்களுக்கு பதிலாகக விர்ச்சுவல் கேமரா மூலமாக பார்க்கும் வசதி இடம்பெற்றுள்ளது.

கேமராவின் வாயிலாக இரண்டு திரைகள் மூலமாக உயர் துல்லியத்தில் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியும். சைடு மிரர்களுக்கு பதிலாக விர்ச்சுவல் கேமரா வசதியுடன் வரும் உலகின் முதல் தயாரிப்பு நிலை கார் மாடல் ஆடி இ- ட்ரான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மின்சார காரில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி உள்ளது. 660 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும், பானட்டிற்குள் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட காரின் சார்ஜர், வயர்களை வைப்பதற்கான இடவசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி இ- ட்ரான் மின்சார கார் ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான ரகத்தில் சொல்லப்படுகிறது. வரும் 27ந் தேதி ஆடி இ ட்ரான் மின்சார கார் இந்தியாவில் முன்னோட்டமாக அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.1.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: NDTV Auto


Click it and Unblock the Notifications








