சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலை வேண்டாம்: தானாக மின் சக்தியை மோட்டாரில் பெறும் ஆடியின் அதிநவீன கார்!
ஆடி நிறுவனம் புத்தம் புதிய இ-டிரான் 55 குவாட்ரா மாடல் காரை தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சொகுசு கார்களைத் தயாரித்து வரும் ஆடி நிறுவனம், தனது இ-டிரான் காரை பாங்காக்கில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. எஸ்யூவி மாடலில் இருக்கும் இந்த மின்சாரக் கார், தொழில்நுட்பம் மற்றும் சொகுசுக்கு வசதிகளுக்கு சிறிதளவும் குறைவின்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடி இ-டிரான் 55 குவாட்ரா மாடல் இரண்டு விதமான மின் மோட்டார்கள் மூலம் இயங்குகிறது. மிகவும் அமைதியாக இயங்கும் இந்த இரண்டு மின் மோட்டார்களும் 408 குதிரை திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. மேலும், இது 5.7 செகண்டில் 0-த்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும். இது மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இந்த காரில் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சக்கரங்களுக்கு உந்து சக்தி செலுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், காரின் நான்கு சக்கரங்களும் சுழலும் சக்தியைப் பெறுகின்றன. இது, காரை கரடு முறடான சாலைகளில் மிகவும் சீராக இயக்கும்.

இதையடுத்து இ-டிரான் 55 குவாட்ராவில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, காரின் கீழ்தளத்தின் மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைப்படவே தேவையில்லை. ஏனென்றால், 90 சதவீத பேட்டரி சக்தி இழப்பிற்கு பின், மின் மோட்டாரில் இருந்து தேவையான சக்தியை தானாக பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம் இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த காரில் இன்டக்ரேடட் எலக்ட்ரோ ஹைட்ராலிக் பிரேக் கன்ட்ரோல் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த காரில் மேலும் ஓர் முக்கிய அம்சமாக ஆப்ஷனல் விர்ட்சுவல் எக்ஸ்டீரியர் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கண்ணாடி அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த கேமிராக்கள், பக்கவாட்டில் வரும் வாகனங்கள் குறித்த தகவலை காரின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பேடில் காட்சியாக காட்டிக்கொடுக்கும். இதனால், வாகன ஓட்டி முன்பக்கம், பின்பக்கம் என திரும்பிப் பார்த்து வாகனத்தை இயக்கும் சூழல் தவிர்க்கப்படும்.

இதைத்தொடர்ந்து, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் நேவிகேஷன் எல்டிஇ கன்னெக்டிவிட்டியுடன் கூடிய எம்எம்ஐ மீடியா சென்டர் மற்றும் வைபை ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் வழங்கப்பட்டுள்ள எஃபிசியன்ஸி அசிஸ்ட் மோட், காரை எக்கனாமிக்கல் ஸ்டைலில் இயக்க உதவுகிறது.

ஆடியின் இந்த இ-டிரான் 55 குவாட்ரா காரின் விலையானது இந்திய மதிப்பில் 1 கோடியே 10 லட்சத்து 66 ஆராயிரத்து 247 ரூபாய் என கூறப்படுகிறது. உலகின் கார் சந்தையை புறட்டிப்போடும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள இந்த கார், தற்போது தாய்லாந்தின் சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் வரும் வருடங்களில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








