"புதிய வாகனங்கள் அறிமுகம் கிடையாது" 2020 வாகன கண்காட்சியை புறக்கணிக்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்...
வருகின்ற 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள வாகன கண்காட்சியை பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தலைநகர் டெல்லியில் அடுத்த (2020) ஆண்டு நடைபெற உள்ள வாகன கண்காட்சியை (ஆட்டோ எக்ஸ்போ) பெருவாரியான வாகன உற்பத்தி நிறுவனங்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தற்போது நிலவி வரும் மந்த நிலையே முக்கிய காரணமாக இருப்பதாக வாகனத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவை நாட்டின் ஜாம்பவான் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, பிஎம்டபிள்யூ மற்றும் அசோக் லேலேண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தவிர்க்க இருகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே போதுமான அளவில், புதிய வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ததும் இதற்கு மற்றுமொரு காரணமாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, முன்பைப்போன்றில்லாமல், இப்போதெல்லாம் பார்வையாளர்கள் குறைவாகவே வருவதாக கூறப்படுகின்றது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன.

அதேசமயம், இந்தியாவில் புதிதாக கால் தடம் பதித்துள்ள கியா மற்றும் எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் புதிய உற்சாகத்துடன் அதன் புத்தம் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன், சீனாவில் மிகப் பெரிய ஜாம்பவானாக செயல்பட்டு வரும் கிரேட் வால் மோட்டார் நிறுவனம், அதன் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், போக்ஸ்வேகன் போன்ற ஒரு சில நிறுவனங்கள் அதன் எதிர்கால வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
இத்துடன், மாருதி சுஸுகி போன்ற ஒரு சில பிரபல நிறுவனங்கள் தங்களுக்கான இடத்தை இப்போதே முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில், தற்போது வரை 3,500 சதுர அடிக்கான இடங்கள் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டன. இதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் அடங்கும்.

அதேசமயம், வாகன கண்காட்சி புறக்கணிப்பில், ஃபோர்டு மற்றும் ஃபியட் கிரிஸ்லர் நிறுவனங்களும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இதில், நிஸான் நிறுவனமும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவல் விரைவில் அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட உள்ளது.

அதேபோன்று, சொகுசு வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் லெக்சஸ் ஆகிய இரு நிறுவனங்கள், 2020 பிப்ரவரி வாகன கண்காட்சியில் கலந்துக் கொள்ள இருக்கின்றன.

ஹோண்டா நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்பெற உள்ள காலகட்டத்தை சிறந்ததாக உணரவில்லை. இதன்காரணமாகவே, வாகன கண்காட்சியைப் புறக்கணிக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.
இவ்வாறு, வாகன உற்பத்தி நிறுவனங்கல் பல இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வரும் வேலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம், பெருத்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றது.

அந்த உற்சாகத்திற்கு அண்மைக் காலங்களாக அதன் தயாரிப்பான ஹெக்டர் காருக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பே முக்கிய காரணமாக இருக்கின்றது.
பொதுவாக, ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து இடங்களும் புக் செய்யப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு இந்திய வாகனச் சந்தையைப் போலவே, காட்சிப்படுத்துவதற்கான இடமும் மந்தமாகவே புக் செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ருத்ரேஜ் சிங் கூறியாதாவது, "எங்களின் நிறுவனம் ஏற்கனவே கணிசமான புதிய மடால்களை அறிமுகம் செய்துவிட்டது. எனவே, புதிதாக அறிமுகம் செய்வதற்கான மாடல்கள் தற்போது இல்லை. ஆகையால், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.

நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களைப் போலவே இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சில நிறுவனங்களும் 2020ம் ஆண்டு வாகன கண்காட்சியைப் புறக்கணிக்க இருக்கின்றன.
இதில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார், யமஹா மற்றும் ராயல் என்பீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். மேலும், இதில் ஹோண்டா மோட்டார்சைக்கிள், சுஸுகி மற்றும் பியாஜியோ ஆகிய நிறுவனங்களும் இணைய இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ புறக்கணிப்பு குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய வாகனங்களுக்கு பதிலாக ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மையில், இந்த நிறுவனம் பிஎஸ்-6 தரத்திலான ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த தரத்தில் அறிமுகமான முதல் பைக் இதுவே ஆகும்.

அதேபோன்று, கனரக வாகன அறிமுகத்தையும் ஒரு சில நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன. அந்தவகையில், அசோக் லேலேண்ட், ஈச்சர் மற்றும் பாரத் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை தவிர்க்க இருக்கின்றன.
ஆனால், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மட்டும் புதிய டிரக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








