பஜாஜ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா பெங்களூரில் சோதனை ஓட்டம்!
பஜாஜ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை பெங்களூர் சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. அப்போடு எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோரிக்ஷா தயாரிப்பில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. நகர்ப்புற போக்குவரத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆட்டோரிக்ஷாக்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், நகர்ப்புறங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபடுதலை தவிர்ப்பதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.

அதற்கு ஏற்றாற்போல், பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷாவை களமிறக்க பஜாஜ் ஆட்டோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷாவை உருவாக்கி இருக்கும் அந்நிறுவனம், தற்போது அதனை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தி வருகிறது.

அண்மையில் பெங்களூரில் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், பஜாஜ் ஆட்டோரிக்ஷா சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் ரஷ்லேன் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பார்ப்பதற்கு தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடலை போலவே டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தற்போதைய ஆட்டோரிக்ஷா மாடல்களைவிட அகலம் குறைவாக தெரிகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் தீ அணைப்பான் சிலிண்டர், பிரகாசமான ஒளியை வழங்கும் ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் 48V லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். போகிற போக்கிலேயே சார்ஜ் ஏற்றுவதற்கான விசேஷ பவர் பேங்க் சார்ஜரும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். மணிக்கு 45 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். ஓட்டுனரை சேர்த்து 4 பேர் செல்லும் வசதியை பெற்றிருக்கும்.

பஜாஜ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் முதலில் பெங்களூரில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம். அங்கு பேட்டரியை சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கை போதிய அளவில் இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கருதுவதே முக்கிய காரணம்.

மேலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அர்பனைட் என்ற பிராண்டில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனவே, பஜாஜ் அர்பனைட் பிராணடில் வரும் முதல் மாடலாக இந்த ஆட்டோரிக்ஷா இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. விற்பனைக்கு வரும்போது, மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








