பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா?
பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பிஎஸ்-6 (BS-6) மாசு உமிழ்வு விதிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதனால் தற்போது விற்பனை செய்யப்படும் பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதா? அல்லது பிஎஸ்-6 வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் வரை காத்து கொண்டிருப்பதா? என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

பிஎஸ்-6 வாகனங்களை வாங்குவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. அரசின் விதிகளுக்கு இணங்கும் வகையில் அந்த வாகனம் இருக்கும். ஆனால் பிஎஸ்-6 வாகனங்களை காட்டிலும் தற்போதே பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதால் உங்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன? என்பதை இனி பார்க்கலாம்.

பிஎஸ்-6 வாகனங்களின் விலை அதிகம்:
பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணையான இன்ஜின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்துவதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய வேண்டியுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சுமை வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்தப்படும்.

எனவே பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான டூவீலர் என்றாலும் சரி அல்லது நான்கு சக்கர வாகனம் என்றாலும் சரி, பிஎஸ்-4 வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதன் விலை அதிகமாகதான் இருக்கும். எனவே பிஎஸ்-4 விதிகளுக்கு இணையான வாகனங்களை வாங்குவதன் மூலமாக உங்களால் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.

பிஎஸ்-6 வாகனங்களின் பெர்ஃபார்மென்ஸ் குறைவு:
பிஎஸ்-4 வாகனங்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலான பிஎஸ்-6 வாகனங்கள் சில பிஎச்பி பவரை இழக்க உள்ளன. கணிசமான அளவில் சுத்தமான எக்ஸாஸ்ட் வாயுக்களை உமிழ்வதற்காக பிஎஸ்-6 வாகனங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பெர்ஃபார்மென்ஸ் விஷயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதற்கு ஒரு உதாரணத்தை உங்களுக்கு சொல்கிறோம்.

பிஎஸ்-4 யமஹா எப்இஸட்-எஸ் வெர்ஷன் 3 பைக் 13.2 பிஎஸ் பவரை உருவாக்கும். ஆனால் அதன் பிஎஸ்-6 வெர்ஷன் வெறும் 12.3 பிஎஸ் பவரை மட்டுமே வெளிப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எடுத்துக்காட்டு மட்டுமே. எனவே வாகனம் நல்ல பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புபவர்கள் பிஎஸ்-4 வெர்ஷன்களை தேர்வு செய்வதே நல்லது.

தற்போதைய தள்ளுபடிகள்:
இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது மந்தநிலை நிலவி வருகிறது. அத்துடன் பண்டிகை காலமும் நெருங்கி வருகிறது. எனவே வாகன விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வாரி வழங்கி கொண்டுள்ளன. எனவே தற்போது வாகனங்களை வாங்குவதன் மூலம் நீங்கள் இவற்றை பெற முடியும்.

அதே நேரத்தில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை காத்திருந்தால், உங்களுக்கு இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அதிக விலை கொடுத்து நீங்கள் வாகனங்களை வாங்க வேண்டியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வரும் தேதியை ஒத்தி வைக்க வாய்ப்பே இல்லை:
பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வரும் தேதி ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சிலர் நினைத்து கொண்டுள்ளனர். அதாவது கைவசம் உள்ள ஸ்டாக்குகளை விற்பனை செய்வதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு கருணை காலம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது மலிவான விலையில் வாகனங்கள் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வரும் தேதியை ஒத்தி வைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நாட்டின் சுற்றுச்சூழல் தொடர்புடைய பிரச்னை என்பதால், பிஎஸ்-6 விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது. எனவே நீங்கள் இவ்வாறான எண்ணம் கொண்டவர் என்றால், உடனடியாக உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








