டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகர்: எதற்காக தெரிஞ்சா நிச்சயம் கோபமடைவீர்கள்.. வீடியோ
டோல்கேட்டை ஓசியில் கடக்க அனுமதிக்காத காரணத்தால், சுங்கச்சாவடியின் ஊழியர்களை பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்த பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள பல முக்கிய மாநிலங்களையும், பகுதிகளையும் இணைப்பதில் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கினை வகின்றன. இவற்றைச் சிறந்த முறையில் கட்டமைப்பதற்காக, குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், சில தேசிய நெடுஞ்சாலைகளில் வரையறுக்கப்பட்ட தொகைக்கும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ஏற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இருப்பினும், கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை கடக்க முடியும் என்ற கட்டாயத்தின்காரணமாக, பொதுமக்கள் பலர் அதனை செலுத்தி, சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசியல்வாதிகள் பலர் முறையாக டோல் கட்டணத்தை செலுத்துவதில்லை என கூறப்படுகின்ற. மேலும், டோல் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும், சில நேரங்களில் தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், இதுபோன்ற ஓர் சம்பவம்தான் டெல்லி-ஆக்ரா அதிவேக சாலையில் அரங்கேறியுள்ளது. இந்த சாலை நாட்டில் உள்ள மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கின்றது. மேலும், ஆக்ரா மற்றும் நொய்டா ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய சாலையாகவும் இது இருக்கின்றது.

யமுனா எக்ஸ்பிரஸ்-வே என்று அழைக்கப்படும் அந்த சாலையில், உள்ளூர் பாஜக கட்சியின் அரசியல் பிரமுகரும், அவரது தொண்டர்களும் இணைந்து பயணித்துள்ளனர். டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆகிய இரு கார்களில் வந்த அவர்கள், ஜெவார் டோல்பிளாசாவை இலவசமாக கடக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்கு அதன் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், டோல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கட்சிகாரர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த வாக்கும்வாதம் முற்றவே, டோல்பிளாசா அதிகாரியைத் தொடர்பு கொண்டு, அவர்களை இலவசமாக செல்ல அனுமதித்துள்ளனர். டோல்பிளாசாவை கடந்த இரு கார்களும், சற்று முன்னோக்கி சென்ற பின்னர், மீண்டும் பின்னோக்கி வந்துள்ளது.

மேலும், அவர்களை செல்லவிடாமல் தடுத்த ஊழியர்கள் மூவரை அந்த பாஜக கட்சியினர், அடுத்து துவைத்து எடுத்துள்ளனர். இதில், அவர்கள் மூவரும் பலத்த காயமுற்றநிலையில் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த வாரம் புதன்கிழமை அன்று, மாலை 5.50 மணியளவில் அரங்கேறியதாக கூறப்படுகின்றது.

மேலும், இச்சம்பவத்தில் உள்ளூர் பாஜக பிரமுகரான சஞ்ஜீவ் ஷர்மா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது பதிவாகிய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், சம்பவத்தின்போது அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஜய் பாட்டியும் உடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், சஞ்ஜீவ் ஷர்மா மீது மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்மீது 506 (மிரட்டல்), 504 (அவமதிப்பு) மற்றும் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துகிறது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அந்த சுங்கச்சாவடியின் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது, பாஜக பிரமுகர்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், அவர்களது கைப்பேசியும் அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி திட்டங்களை சாலை மற்றும் போக்குவரத்துச் சார்ந்த துறைகளில் அரங்கேற்றி வருகின்றது.
அந்தவகையில், டோல் கட்டணத்தை எளிதில் செலுத்தும் விதமாக ஃபாஸ்ட் டேக் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நல்ல சாலைகள் வேண்டுமானால் மக்கள் கட்டாயம், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது கட்சிக்காரரே ஓசியில் பயணம் செய்ய அனுமதி கோரி தகராறில் ஈடுபட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தகராறு மட்டுமின்றி, சுங்கச்சாவடியையும், அதன் ஊழியர்களையும் அடித்து துவம்சம் செய்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து எம்எல்ஏக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அந்த காரில் பயணம் செய்ய வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே டோல்கேட் கட்டணம் செலுத்துவதிலிருந்து அந்த வாகனத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியும்.

அத்துடன் இந்த விதிவிலக்கு எம்எல்ஏவின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு மட்டுமே அளிக்கப்படும். அதனை உறுதிச் செய்கின்ற வகையிலான ஸ்டிக்கர் அல்லது முத்திரை, குறிப்பிடப்பட்ட வாகனங்கள் மீது ஒட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








