இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு ஆய்வு: பிஎம்டபிள்யூ தகவல்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

மஹிந்திரா வெரிட்டோ மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துவிட்டாலும், கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அனைத்து கார் நிறுவனங்களையும் யோசிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான கட்டமைப்பு குறைவாக இருக்கும் நிலையிலும், ஹூண்டாய் கோனா காருக்கு சிறப்பான எண்ணிக்கையில் முன்பதிவு கிடைத்துள்ளது. இதனால், முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளன.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் நுழைந்த சில மாதங்களிலேயே இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் ஜனவரியில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை நிலவரம் குறித்து பிஎம்டபிள்யூ ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், தனது கீழ் செயல்படும் மினி சொகுசு கார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் முதலில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மினி நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரிவுத் தலைவர் பிராங்கோசிஸ் ரோகா,"எலெக்ட்ரிக் கார்களுக்கு தகுந்த சந்தை வாய்ப்பு இருந்தால், அங்கே நாங்களும் களமிறங்குவோம். சென்னையில் எங்களுக்கு ஆலை இருப்பதால், இதனை சாத்தியப்படுத்துவது எளிதாக இருக்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை குறித்து ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் கார்களின் சந்தை வலுவாக அமைய அதற்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும். எலெக்ட்ரிக் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை எட்டுவதற்கு இந்தியா நீண்ட காலம் பயணிக்க வேண்டியிருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் மினி நிறுவனம் மினி கூப்பர் எஸ்இ என்ற முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டது. இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிஎம்டபிள்யூ ஆய்வு செய்து வருகிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 235 கிமீ முதல் 270 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த காரில் 32.6 kWh பேட்டரி உள்ளது. இதன் மின் மோட்டார் 0 -100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 35 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும். முழுமையாக சார்ஜ் ஏற்ற 150 முதல் 210 நிமிடங்கள் பிடிக்கும். இதன் மின் மோட்டார் 184 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








