டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!
டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் காரணமாக 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் பிஎஸ்-6 பெட்ரோல் மற்றும் டீசல் தற்போது தலைநகர் டெல்லியில் கிடைக்கிறது.

பிஎஸ்-6 எரிபொருள் தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜ்யசபாவில் நேற்று (ஜூலை 15) தெரிவித்தார். அத்துடன் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும் என்பதையும் அவர் உறுதி செய்தார்.

இந்திய மார்க்கெட்டில் தற்போதே பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான வாகனங்கள் கிடைக்க தொடங்கியுள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. எனினும் ஏராளமான நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை தற்போது சோதனை செய்து வருகின்றன.

அவை அனேகமாக நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் இந்திய தலைநகர் டெல்லியும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக டெல்லி மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக மேலும் சில நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதில், பல்வேறு எக்ஸ்பிரஸ்வேக்கள் மற்றும் பைபாஸ்களை உருவாக்குவதும் அடக்கம். இதன் மூலம் டெல்லி நகர எல்லைக்குள் லாரி போன்ற கனரக வாகனங்கள் நுழைவது தடுக்கப்படும். தற்போதைய சூழலில் 60 ஆயிரம் லாரிகள் டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக இந்தியாவின் வாகன மார்க்கெட் எதிர்காலத்தில் முற்றிலுமாக மாறப்போகிறது. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தங்கள் வாகனங்களில் டீசல் இன்ஜின்களின் எந்தவொரு வெர்ஷனையும் வழங்க மாட்டோம் என இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே அறிவித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தி விட முடிவு செய்துள்ளன. சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த அதிக செலவு ஆகும். எனவே அவற்றை அப்டேட் செய்வது என்பது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது என்பதால், ஒரு சில நிறுவனங்கள் இவ்வாறான முடிவை எடுத்துள்ளன.

கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற தொடங்கியுள்ளன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரவுள்ளது. ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு மானியம் மற்றும் வரி சலுகைகளை வழங்குவதன் மூலமாக இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைவதற்கு, உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாதது ஒரு தடையாக உள்ளது. எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது.


Click it and Unblock the Notifications








