மோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா?
மோடி அரசின் அதிரடியான அதே சமயம் பயனுள்ள திட்டங்கள் காரணமாக வாகனங்கள் விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த சில மாதங்களாக கடும் திணறலுக்கு ஆளாகி வருகிறது. கார், டூவீலர் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் சமீப காலமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22,83,262 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையானது கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில், 20,86,358ஆக சரிவடைந்துள்ளது. இது 8.62 சதவீத வீழ்ச்சியாகும்.

இதில், பயணிகள் வாகன (Passenger Vehicles) செக்மெண்ட் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 20 சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது. அதே சமயம் வர்த்தக வாகனங்கள் (Commercial Vehicles) விற்பனை 14 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை சுமார் 25 சதவீதமும், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 7.6 சதவீதமும் சரிவடைந்துள்ளது. அதே நேரம் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 10 சதவீதமும், டூவீலர்களின் விற்பனை 5.4 சதவீதமும் குறைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் பிஎஸ்-6 விதிமுறைகள் மற்றும் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக வாகனங்கள் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 (BS-VI) மாசு உமிழ்வு விதிமுறைகள், வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

இதுதவிர இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, புதிய பாதுகாப்பு விதிமுறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில், சில விதிமுறைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே அமலுக்கு வந்து விட்டன. சில விதிமுறைகள் வரும் மாதங்களில் அமலுக்கு வரவுள்ளன. இதுபோன்ற காரணங்களால் வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கவுள்ளது.

அதாவது பிஎஸ்-6 விதிமுறைகள் மற்றும் புதிய பாதுகாப்பு விதிகள் காரணமாக பயணிகள் வாகனங்களின் உற்பத்தி செலவு 12-15 சதவீதமும், வர்த்தக வாகனங்களின் உற்பத்தி செலவு 15-20 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்தியாவில் வாகனங்களின் விலை 20 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) ஏஜென்சி நேற்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே மந்த நிலை நிலவி வருகிறது. எனவே விலை உயர்வு என்ற கூடுதல் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தினால், வாகனங்களின் விற்பனை இன்னும் சரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே தற்போது உள்ள மார்க்கெட் சூழலை கருத்தில் கொண்டு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த விலை உயர்வை உடனடியாக வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்துவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








