இந்தியாவிற்கு மோடி செய்யப்போகும் நல்ல காரியம் இதுதான்... அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவிற்கு நல்ல காரியம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்களும் தற்போது காற்று மாசுபாடு என்ற பெரும் பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அபாயகரமான காற்றைதான் சுவாசித்து கொண்டுள்ளனர்.

சுத்தமான காற்று மாசுபாடு அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணம். தற்போதைய நிலையில் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

இது நிலைமையை மேலும் சிக்கலாக்கி கொண்டுள்ளது. ஆனால் இதற்காக வாகனங்களுக்கு தடை விதிப்பது என்பது இயலாத காரியம். இருந்தாலும் வாகனங்களின் இன்ஜின் மற்றும் எரிபொருள் தயாரிப்பில் சில மாறுதல்களை செய்வதன் மூலம், அவை வெளியிடும் புகையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

இதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பாரத் ஸ்டேஜ் (BS - Bharat Stage). இதை சுருக்கமாக பிஎஸ் என கூறலாம். இந்தியாவில் தற்போது பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகள் அமலில் உள்ளன. இந்த சூழலில் அதை காட்டிலும் மேம்பட்ட, மிகவும் கடுமையான பிஎஸ் - 6 விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.

காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்வதால், பிஎஸ்-5 மாசு உமிழ்வு விதிகளை தவிர்த்து விட்டு இந்தியா நேரடியாக பிஎஸ்-6 விதிகளுக்கு செல்கிறது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

எனவே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும், பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையில், தங்கள் மாடல்களை வேக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்கள் சற்றே தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவது சற்று எளிதுதான். ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களை அப்டேட் செய்வதுதான் சவாலான காரியமாக உள்ளது.

சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு இணையாக மேம்படுத்த அதிக செலவு ஆகும். எனவே பிஎஸ் -6 விதிகள் அமலுக்கு வந்த பிறகு, சிறிய டீசல் இன்ஜின் உற்பத்தியை கைவிட உள்ளதாக ஒரு சில முன்னணி கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டன. ஆனால் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், உச்ச நீதிமன்றம் தயவு காட்ட அதிரடியாக மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தலைநகர் டெல்லியில், உலக சுற்றுச்சூழல் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிஎஸ்-6 விதிகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலமாக வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு வெகுவாக குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் பிஎஸ்-4 விதிகளை 2022ம் ஆண்டுதான் அமலுக்கு கொண்டு வர நரேந்திர மோடி அரசு திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவில் காற்று மாசுபாட்டின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, அதனை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அமலுக்கு கொண்டு வந்து விட்டதாகவும் அவர் கூறினார். அத்துடன் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான வாகனங்கள் 2020ம் ஆண்டு முதல் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ''டெல்லி உள்பட அனைத்து இடங்களிலும், வரும் 2020ம் ஆண்டு முதல் பிஎஸ்-6 எரிபொருள் கிடைக்கும். வாகனங்களும் அதற்கு ஏற்ப தயாரிக்கப்படும். ஆனால் இதற்கு கடுமையான உழைப்பு தேவை. இது ஒரு அர்ப்பணிப்புதான்.

கண்டிப்பாக இதனை நிறைவேற்றியாக வேண்டும். இந்த கடின உழைப்பின் மூலம் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை வெகுவாக குறைக்க முடியும். பிஎஸ்-6 விதிகளை அமல்படுத்துவதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

காற்று மாசுபாடு குறித்து பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறுகையில், ''காற்று மாசுபாடு அடைந்து வருகிறது. ஆனால் இது வெறுமனே இந்தியாவிற்கான பிரச்னை என்று மட்டும் கூறி விட முடியாது. இது உலகளாவிய பிரச்னை. இந்த சவாலை எதிர்கொள்ள நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என்றார்.

இதனிடையே டெல்லியை சுற்றி வெளிவட்ட சாலை (Peripheral Road) அமைக்கும் பணியில் முனைப்பு காட்டியதற்காக மோடி அரசை, பிரகாஷ் ஜவடேகர் பாராட்டவும் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''டெல்லியில் வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள் 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் அதனை நிறைவு செய்துள்ளோம். இதன் காரணமாக டெல்லிக்குள் லாரிகள் நுழைவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தகைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாடும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் சிறிய அளவிலான பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன. அதுவும் முடிக்கப்பட்டு விட்டால், வேறு இடத்தை சென்று சேர்வதற்காக எந்த ஒரு லாரியும் டெல்லியின் வழியாக வராது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபாடு இன்னும் குறைக்கப்படும்'' என்றார்.

முன்னதாக பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்கள் விலை கடுமையாக உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டால், இது வரவேற்கத்தக்க முடிவுதான்.


Click it and Unblock the Notifications








