புதிய அம்சத்துடன் களமிறங்கிய உங்கள் அபிமான மாருதி சுஸுகி வேகன்ஆர்.. கூடவே அதிர்ச்சி தகவலும் வெளியீடு
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த வேகன்ஆர் மாடலின் பிஎஸ்-6 தரத்திலான வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின், புகழ்வாய்ந்த மாடல்களில் வேகன் ஆர் காரும் ஒன்று. இது எந்த அளவிற்கு புகழ்வாய்ந்த மாடல் என்பதை, இதன் விற்பனை வளர்ச்சியைப் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும். அந்தவகையில், வேகன்ஆர் கார், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிகமாக விற்பனையாகும் கார்களில், 5ம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், இந்த கார் இந்திய வாகனச் சந்தையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் கலக்கி வருகின்றது. இந்நிலையில், வேகன்ஆர் காரின் பிஎஸ்-6 தரத்திலான 1.2 லிட்டர் எஞ்ஜின் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன், தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் (1.0 லிட்டர் எஞ்ஜின்) மாடலின் விலையை அந்த நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது. அவ்வாறு, ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலை, நடப்பாண்டின் ஆரம்பத்தில்தான், புதிய தலைமுறை மாடலாக அப்டேட் செய்து மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

அறிமுகத்தின்போது, அதனை ரூ. 4.19 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. அதேபோன்று, அதன் டாப் வேரியண்டிற்கு ரூ. 5.22 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது விலையுயர்வால் அதன் ஆரம்ப வேரியண்ட் ரூ. 4.34 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியண்ட் ரூ. 5.38 லட்சம் என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட உள்ளது.

அதேபோன்று, தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பிஸ்-6 தரத்திலான, 1.2 லிட்டர் எஞ்ஜின் கொண்ட வேகன்ஆர் காருக்கு, ரூ. 5.10 லட்சம் முதல் ரூ. 5.91 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேபோன்று, வேரியண்டின் தகுதிக்கு ஏற்ப இதன் விலை மாற்றமடையலாம்.

இந்த புதிய தலைமுறை வேகன்ஆர் மாடலில், முந்தைய மாடலைக் காட்டிலும் கணிசமான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு, இதன் வீல் பேஸை 35மிமீ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், காரின் நீளமும் 56மிமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. மேலும், 150மிமீ பரப்பளவைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய மாடலைக்காட்டிலும் தற்போதைய புதிய மாடலில் கூடுதல் இடவசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, புதிய ஹெட்லேம்ப், டெயில் லைட், க்ரில் அமைப்பு உள்ளிட்டவை ரீ டிசைனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், இதன் ஏசி வெண்ட் மற்றும் டேஷ்போர்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், முந்தைய மாடல் வேகன்ஆரில் இடம்பெற்றிருக்கும் அதே டிசைன்தான் இன்டீரியரில் காணப்படுகின்றது.

அந்தவகையில், புதிய வேகன்ஆர் காரை, ஹார்டெக்ட் பிளாட்பார்மில் வைத்து மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில்தான், ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் பலேனோ கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, இந்த வேகன்ஆர் காரில், பல்வேறு நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஸ்டியரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடியோ சிஸ்டம், ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வேகன்ஆர் கார், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் கே-செரீஸ் பிஎஸ்-6 தரத்திலான பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இதில், 1.0 லிட்டர் எஞ்ஜின் 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். புதிய எஞ்ஜின் குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

முன்னதாக பிஎஸ்-6 தரத்திலான பெட்ரோல் வேரியண்ட் பலேனோ கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே, மாருதி சுஸுகி நிறுவனம், புகழ்வாய்ந்த வேகன்ஆர் மாடலின் பிஎஸ்-6 தரம் கொண்ட கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








