மகிழ்ச்சியுடன் சேர்த்து அதிர்ச்சியையும் கொடுத்த மத்திய அரசு.. கனகச்சிதமாக நிறைவேறும் திட்டம் இதுதான்
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு மக்களுக்கு மகிழ்ச்சியுடன் சேர்த்து அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைப்பதுடன், வேகமாக மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றை வாங்குவதை எளிதாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மலிவான விலையில் கிடைப்பதற்கான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். அதே சமயம் மற்றொரு புதிய அறிவிப்பு ஒன்றையும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.

இதன்படி எலெக்ட்ரிக் வாகன கடனுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை இனி வரி சலுகை பெற முடியும். அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களை நீங்கள் லோன் மூலமாக வாங்கினால், அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வரை விலக்கு பெறலாம். இதுபோன்ற நடவடிக்கைள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இனி இந்திய ஆட்டோமொபைல் துறையின் முகம் மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மத்திய அரசு கொடுக்கும் ஊக்கம் காரணமாக, வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய சாலைகளுக்கு கொண்டு வரவுள்ளன. உள்ளூர் நிறுவனங்களும் அதற்கு இணையாக எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன.

இந்திய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள அதே சமயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்கள் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் கோனா (Hyundai Kona)
ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் ஜூலை 9ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதுதான் இந்தியாவின் முதல் ரியல் எலெக்ட்ரிக் எஸ்யூவி என ஹூண்டாய் தெரிவிக்கிறது. 25 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் ஹூண்டாய் கோனா எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கோனா இந்தியாவிற்கு 39.2 kWh லித்தியம் இயான் பேட்டரியுடன் வரவுள்ளது. இது அதிகபட்சமாக 134.13 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம். 100kW DC ஃபாஸ்ட் சார்ஜர் ஹூண்டாய் கோனாவை வெறும் 54 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் (Maruti Suzuki Wagon R EV)
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மூவ் குளோபல் மொபிலிட்டி மாநாட்டில், மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை முதல் முறையாக காட்சிக்கு வைத்தது. வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் லித்தியம் இயான் பேட்டரி பயன்படுத்தப்படவுள்ளது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியை பெறுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்வதை மாருதி சுஸுகி சமீபத்தில் உறுதி செய்தது. இந்த காரை 7 லட்ச ரூபாயில் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிஸான் லீஃப் (Nissan Leaf)
நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் சர்வதேச மார்க்கெட்களில் ஏற்கனவே விற்பனையில் சாதித்து வருகிறது. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் நிஸான் லீஃப் முன்னணியில் உள்ளது. நிஸான் லீஃப் 40 kWh பேட்டரியை பெற்றுள்ளது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.

நிஸான் லீஃப் காரை முழுமையாக சார்ஜ் செய்ய பவர் கெபாசிட்டியை பொறுத்து 8 முதல் 16 மணி நேரம் வரை ஆகும். ஆனால் நிஸான் லீஃப் குயிக் சார்ஜிங் (Quick Charging) வசதியை பெற்றுள்ளது. இது பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடும். இந்த சூழலில் லீஃப் காரை இந்திய மார்க்கெட்டிற்கும் கொண்டு வரவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் நிஸான் அறிவித்தது.

நிஸான் லீஃப் கார் இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் பீரிமியம் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது இருக்கலாம். எனவே இதன் விலை 30 முதல் 35 லட்ச ரூபாய் வரையில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜி இஇஸட்எஸ் (MG eZS)
எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது. இதனை ஒரு முறையாக முழுமையாக சார்ஜ் செய்தால், 335 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 லட்ச ரூபாய் என்ற அளவில் விலை நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாலைகளை பராமரிப்பதற்காக வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








