இந்த விஷயத்தில் உலகிலேயே இந்தியாதான் நம்பர்-1... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...
இந்த விஷயத்தில் இந்தியாதான் தற்போது உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் இந்த விஷயம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் வாகனங்களில் வெளியே சென்று விட்டு வீடு திரும்புவது என்பது மிகவும் சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்னையே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள் மிக மிக அவசியம். நன்கு அகலமான, விரைவாக சென்று வரக்கூடிய சாலைகள் இருந்தால் மட்டுமே, ஒரு நாடு பொருளாதார ரீதியில் வெகுவாக முன்னேற்றம் அடைய முடியும். எனவேதான் சாலைகள் மிகவும் அத்தியாவசியமானவையாக பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மிக மிக முக்கியம். எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிக அளவிலான தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் பொருளாதார வளர்ச்சிக்காக தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயம் அழிக்கப்படுவதாகவும், நிழலுடன் சேர்த்து வருமானமும் தரும் மரங்கள் வெட்டி வீசப்படுவதாகவும் பல்வேறு புகார் உள்ளன.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிரான பல்வேறு கட்ட போராட்டங்கள் தற்போதுதான் ஓய்ந்துள்ளன.

பெயரில்தான் பசுமை உள்ளதே தவிர இது பசுமையை முற்றிலுமாக அழிக்கும் திட்டம் என்பதே அனைவரின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. எனவேதான் விவசாயிகளுடன் இணைந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சூழலில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதி அமைச்சரான பியூஷ் கோயல், நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார். இதில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக சிறிய ரக கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சூழலில் பட்ஜெட் தாக்கலின்போது சில தகவல்களையும் பியூஷ் கோயல் வெளியிட்டார். உலகிலேயே நெடுஞ்சாலைகளை வேகமாக கட்டமைப்பதில் இந்தியாதான் தற்போது முன்னணியில் உள்ளது என்பது இந்த தகவல்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 27 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த வேகம் அடுத்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 40 கிலோ மீட்டர்களாக உயர்த்தப்படும் எனவும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமானது என்பதால்தான், கிடப்பில் போடப்பட்டிருந்த அனைத்து நெடுஞ்சாலை பணிகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிச்சயமாக இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய செய்திதான் இது. ஆனால் விவசாயத்தை அழிக்காமல், மரங்களை அதிகம் வெட்டாமல் நெடுஞ்சாலை பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரது எண்ணமும்.

வளர்ச்சி திட்டங்களுக்காக சாலைகளில் உள்ள மரங்களை வெட்டினால், ஒரு மரத்திற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறிதான்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விஸ்வரூபமெடுத்தன. அப்போது உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அப்போது எழாத எதிர்ப்பு தற்போது எழுகிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








