இந்தியாவில் வாகன மார்க்கெட் தள்ளாடி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு இதுதான்
இந்தியாவில் வாகன மார்க்கெட் தள்ளாடி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பட்ஜெட் நேற்று (ஜூலை 7) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

12 சதவீதமாக இருந்து வந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி தற்போது வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் சில உதிரி பாகங்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.

ஆனால் ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்த வேறு சில அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது நேரம் சரியில்லை போல. கடும் சிரமங்களை அது எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது.

எனவே 28 சதவீதமாக உள்ள வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 10 சதவீதம் குறைத்து, 18 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM - Society of Indian Automobile Manufacturers) மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என கூட்டமைப்பினர் நம்புகின்றனர்.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டத்தில் உறுதியாக உள்ள மத்திய அரசு, வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க விரும்பவில்லை என தெரிகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இதன் காரணமாக வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாகவே நீடிக்கிறது.

இதனால் ஆட்டோமொபைல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதவிர மற்றொரு அதிர்ச்சியையும் மத்திய பட்ஜெட் அவர்களுக்கு கொடுத்துள்ளது. குறிப்பிட்ட சில வாகன உதிரி பாகங்களுக்கான சுங்க வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அதிரடியாக உயர்த்தியுள்ளார். இதில், கிளாஸ் மிரர்கள், லாக், கேட்டாலிடிக் கன்வெர்டர் (Catalytic Converter), இன்ஜின்களுக்கான ஆயில் அல்லது பெட்ரோல் பில்டர்கள், ஹாரன்கள், விண்டுஸ்க்ரீன் வைப்பர்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியாவில் கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், இவற்றில் பெரும்பாலான உதிரி பாகங்களை உள்ளூர் உற்பத்தியின் மூலமாகவே பெற்று கொண்டுள்ளன. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் வால்வோ உள்ளிட்ட லக்ஸரி கார் நிறுவனங்களின் கதையே வேறு.

இந்த உதிரி பாகங்களுக்கு அவை பெரும்பாலும் இறக்குமதியைதான் நம்பியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்களின் விலை கணிசமாக உயர்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

மார்க்கெட் தடுமாறி கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உதிரி பாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலையை கார் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








