பட்ஜெட் 2019: சிறிய கார்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி வரம்பு உயர்வு
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு நேரடி சலுகைகள் அதிக அளவில் அறிவிக்கப்படவில்லை. எனினும், வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இது மாதச் சம்பளதாரர்களுக்கு பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. மிக நீண்டகால கோரிக்கைக்கு தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு செவிசாய்த்து இருக்கிறது.

மேலும், ரூ.6.50 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது நிச்சயம் மாதச் சம்பளதாரர்களின் கையிருப்பை உயர்த்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக, இருசக்கர வாகனஙகள் மற்றும் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் உடனடியாக கார் வாங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ரூ.6 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் சிறிய ரக கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறிய ரக கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கின்றன. அதேபோன்று, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளன.

பேட்டரி கார் தயாரிப்பு
இதுதவிர, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கான வரி 10 முதல் 25 சவதீம் வரை குறைக்கப்பட இருப்பதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக, மின்சார கார்களின் உற்பத்தி செலவீனம் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார வாகனங்களின் விலையும் குறையும். இதன்மூலமாக, மின்சார வாகனங்களுக்கான சந்தை ஏற்றம் பெறும் வாய்ப்புள்ளது.

ஏமாற்றம்
சொகுசு கார்களுக்கான வரி மற்றும் இறக்குமதி செய்யப்படும் உயர் ரக கார்களுக்கு 70 சதவீதமாக இருக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று சொகுசு கார் நிறுவனங்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை இருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு இல்லாதது அந்நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சொகுசு கார்கள் மீது பல்வேறு விதமான வரி விதிப்புகள் மூலமாக இந்த துறையின் வர்த்தகம் நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதால், இதனால் சொகுசு கார் நிறுவனங்கள் முதலீடுகள் செய்வதில் பரிசீலனைக்கு உட்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை
இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், அந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதனால், இருசக்கர வாகனங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. இருப்பினும், வருமான வரி வரம்பு உயர்வு மூலமாக மறைமுகமாக இந்த நிறுவனங்களின் விற்பனை ஏற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








