பைக் சாவியை பறிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளதா? தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்வது இதுதான்
பைக் சாவியை பறிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளதா? என்ற கேள்விக்கு, மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் பெற்றுள்ளார்.

வாகன தணிக்கை என்ற பெயரில் ஒரு சில போலீசார் செய்யும் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அப்பாவி வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பறிப்பதற்கான ஆயுதமாகதான், வாகன தணிக்கை பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்து வருகிறது.

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் என வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் கூட, ஒரு சில போலீசார் பணம் பறிக்காமல் விடுவதே இல்லை. இன்னும் ஒரு சிலரோ, ஆவணங்கள் எதையும் சோதனை செய்யாமல், நேரடியாகவே பணத்தை கேட்டு வாங்கி கொள்ளும்... இல்லை... இல்லை... பறித்து கொள்ளும் வழக்கத்தை வைத்துள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போதிய அளவிற்கு இல்லாததாலும், காக்கி சட்டை மீதான அச்சத்தாலும், கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு வரும் அவல நிலை இங்கு நிலவி வருகிறது. வாகன தணிக்கையில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆங்காங்கே அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடவே செய்கின்றனர்.

Image Source:Puthiyathalaimurai
இருந்தபோதும் தவறு செய்யும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடும் தண்டனை கிடைக்காத காரணத்தால், காவல் துறையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சூழலில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பரமசிவன் என்பவர், போலீசாரின் வாகன தணிக்கை தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

போலீசாரின் அதிகாரங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டத்தை கையில் எடுத்திருந்தார் பரமசிவன். இதில், வாகனங்களின் சாவியை போலீசார் பிடுங்கலாமா? என்பதும் முக்கியமான கேள்விகளில் ஒன்று. வாகனங்களை நிறுத்தினால், உடனே அதன் சாவியை பிடுங்கும் வழக்கத்தை போலீசார் வைத்துள்ளனர்.

குறிப்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால், போலீசார் முதலில் செய்யும் பணி, அதன் சாவியை பிடுங்குவதுதான். இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்து விடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், பைக் சாவியை பறித்து கொண்டதாக கூறி, வாலிபர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி நீண்ட நேரமாக போராட்டம் நடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் வாகன தணிக்கை தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பரமசிவன் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரை காவல்துறையினர் பதில் அளித்துள்ளனர். இதன்படி எந்தெந்த விதிமுறை மீறல்களுக்கு, காவல் துறையினரால் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு ஓவர் லோடு (Over load), ஓவர் ஸ்பீடு (Over speed), சிக்னல் ஜம்ப்பிங் (Signal Jumping) மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது (Drunk and Drive) என பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், சிக்னல் ஜம்ப்பிங் என்பது சிக்னல்களில் வாகனங்களை நிறுத்தாமல் ஓட்டி செல்வதாகும். இதன் காரணமாகவும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் சாவியை காவல்துறையினர் பறிக்கலாமா? என்ற பரமசிவனின் கேள்விக்கு, மோட்டார் வாகன சட்டத்தில் இத்தகைய வார்த்தைகள் எதுவும் இல்லை என மதுரை காவல்துறையினர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் போக்குவரத்து போலீசாரை தவிர்த்து விட்டு, வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் அதிகாரம் யாருக்கெல்லாம் இருக்கிறது? என்றும் பரமசிவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சீருடையில் இருக்கும் அனைத்து போலீசாராலும், பொது பாதையில் செல்லும் வாகனங்களை சோதனை செய்வதற்காக, ஆவணங்களை கேட்க முடியும் என பதில் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications