ஏப்ரல் முதல் கார், பைக் விலை உயர்கிறது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!
கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை, பண பரிமாற்ற விகிதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து காலாண்டுக்கு ஒருமுறை கார் விலை உயர்வு குறித்து அனைத்து நிறுவனங்களும் பரிசீலிப்பது வழக்கம்.
ஏப்ரல் முதல் கார் விலை உயர்த்த இருப்பதாக நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை, பண பரிமாற்ற விகிதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து காலாண்டுக்கு ஒருமுறை கார் விலை உயர்வு குறித்து அனைத்து நிறுவனங்களும் பரிசீலிப்பது வழக்கம். கடந்த ஜனவரியில் பல முன்னணி கார் நிறுவனங்கள் விலையை உயர்த்தின.

டொயோட்டா
கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் கூடுதல் செலவீனங்களால் வர்த்தகத்தில் தாள முடியாத நிலை இருக்கிறது. இதனை கருதி, வரும் ஏப்ரல் 1 முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அந்நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாக உயரும் என்று தெரிகிறது. ஆனால், எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் இல்லை.

ஜாகுவார் லேண்ட்ரோவர்
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது ஜாகுவார் நிறுவனம் எக்ஸ்இ, எக்ஸ்எஃப், எக்ஸ்ஜே, எஃப் ஃபேஸ் ஆகிய கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்தும் எஃப் டைப் காரை இறக்குமதி செய்தும் விற்பனை செய்கிறது.

இதேபோன்று, லேண்ட்ரோவர் நிறுவனம்வெலர், ரேஞ்ச்ரோவர், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் டிஸ்கவரி ஆகிய மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் பெரும்பாலான மாடல்களின் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சந்தை நிலவரம், உற்பத்தி செலவீனம் மற்றும் பொருளாதார காரணிகளால் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாத அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, ஹெக்ஸா, டிகோர், நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட அனைத்து மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஜனவரியில்தான் கார்களின் விலையை ரூ.40,000 வரை டாடா மோட்டார்ஸ் உயர்த்தியது.

கவாஸாகி
கவாஸாகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட பைக் மாடல்களின் விலையை 7 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பண பரிமாற்று விகிதத்தில் நிலவும் ஏற்ற, இறக்கமான நிலை மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைக், ஸ்கூட்டர் விலை உயரும்
வரும் ஏப்ரல் 1 முதல் 125சிசி ரகத்திற்கு கீழான இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், அதற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதனால், அனைத்து இருசக்கர வாகனங்களின் விலையும் உயர இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை
கடந்த ஜனவரியில் பெரும்பாலான நிறுவனங்கள் கார், பைக் விலையை உயர்த்தி, அதனை வாடிக்கையாளர் தலையில் கட்டின. இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கடனில் கார் வாங்குவோரின் மாதத் தவணையில் கூடுதல் சுமை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








