விபத்தின்போது விரிவடையாத ஏர் பேக்... 8 ஆண்டுக்கு பின் கார் நிறுவனத்திற்கு கிடைத்த தண்டனை இதுதான்
கார் விபத்தில் சிக்கியபோது ஏர் பேக் விரிவடையாமல் மோசம் செய்தது. இது தொடர்பான வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு தண்டனை கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியை சேர்ந்தவர் அபேகுமார் ஜெயின். இவர் கடந்த 2010ம் ஆண்டு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஒன்றை வாங்கினார். இந்த கார் வாராண்டியின் கீழ் இருந்த சூழலில், கடந்த 2011ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. ஆனால் விபத்து நடைபெற்ற சமயத்தில் காரின் ஏர் பேக் (Airbag) விரிவடையவில்லை என கூறப்படுகிறது.

கார்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஓர் முக்கிய உபகரணம்தான் ஏர் பேக். கார்களின் விலையை பொறுத்து, அதில் கொடுக்கப்படும் ஏர் பேக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். விபத்து நடைபெறும் சமயங்களில் ஏர் பேக் விரிவடைந்து, காரில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்கும். தற்போது ஏர் பேக்குகள் குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்களிடம் மேலோங்கி வருகிறது.

எனவே பல்வேறு நிறுவனங்களும் பாதுகாப்பிற்காக தங்கள் கார்களில் ஏர் பேக்குகளை வழங்கி வருகின்றன. ஆனால் ஏர் பேக் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கூட சில சமயங்களில் செயல்படாமல் போய், கார்களில் பயணம் செய்யும் பயணிகளை கை விட்டு விடுவதற்கான வாய்ப்புகள் சிறிய அளவில் இருக்கத்தான் செய்கின்றன. அபேகுமார் ஜெயினின் காரிலும் அதேதான் நடைபெற்றது.

விபத்து நிகழ்ந்தபோது, அவரது காரின் ஏர் பேக் விரிவடையாமல் மோசம் செய்தது. எனினும் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கில் கொண்டு, அபேகுமார் ஜெயினுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 2.75 லட்ச ரூபாயை வழங்கியது. ஆனால் கார் உற்பத்தி நிறுவனமும், டீலரும் காருக்கான தொகையை திருப்பி தர வேண்டும் அல்லது காரை மாற்றி தர வேண்டும் என அபேகுமார் ஜெயின் விரும்பினார்.

எனவே அகமதாபாத் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (கூடுதல்) அபேகுமார் ஜெயின் அணுகினார். இது குறைபாடுள்ள கார் எனவும், அதனால்தான் விபத்து நடைபெற்ற சமயத்தில் ஏர் பேக் விரிவடையவில்லை எனவும் அபேகுமார் ஜெயின் தெரிவித்தார். இதுதவிர தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அபேகுமார் ஜெயினின் குற்றச்சாட்டை கார் உற்பத்தி நிறுவனம் மறுத்தது. அதே நேரத்தில் இந்த புகாரை எதிர்த்த அதன் உள்ளூர் டீலர், ஏர் பேக் விரிவடையாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என வாதிட்டார். ''விபத்து நடைபெற்றபோது ஜெயின் காரில் இல்லை. எனவே டிரைவர் சீட் பெல்ட்டை பயன்படுத்தினாரா? என்பதை அவரால் சொல்ல முடியாது'' என்பது டீலரின் வாதமாக இருந்தது.

ஆம், சீட் பெல்ட்டிற்கும், ஏர் பேக்கிற்கும் தொடர்பு உள்ளது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் வேலை செய்யும். ஏர் பேக் விரிவடைவது என்பது வாகனத்தின் வேகத்தை சார்ந்தும் இருக்கும். முன்னதாக காரின் உற்பத்தி குறைபாடு காரணமாகவே ஏர் பேக் விரிவடையவில்லை என இன்சூரன்ஸ் சர்வேயர் தெரிவித்திருந்தார். அவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார்.

ஆனால் ஏர் பேக் ஏன் விரிவடையவில்லை? என்பதை ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியரால் மட்டுமே தெளிவாக கூற முடியும் என டீலர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தீர விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், ஏர் பேக் ஏன் விரிவடையவில்லை? என்பது தொடர்பாக ஆட்டோமொபைல் இன்ஜினியரின் கருத்து இல்லாததால், இந்த கோளாறுக்கான காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்தது.

அத்துடன் ஏர் பேக் விரிவடையாததற்கு உற்பத்தி குறைபாடுதான் காரணம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், காருக்கான தொகையை திருப்பி வழங்க வேண்டும் அல்லது காரை மாற்றி தர வேண்டும் என்ற அபேகுமார் ஜெயினின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த கோளாறு வாராண்டி காலத்தில் நடைபெற்றதால், இது கார் உற்பத்தி நிறுவனத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக பார்க்கப்படுகிறது.

எனவே காரின் உரிமையாளர் அபேகுமார் ஜெயினுக்கு சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் இழப்பீடாக 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக கூடுதலாக ரூ.50 ஆயிரம் சேர்த்து மொத்தம் 2.50 லட்ச ரூபாயை வழங்கும்படி நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








