கார்களை சர்வீஸ் செய்ய இந்தியர்கள் செலவிடும் சராசரி தொகை குறைந்தது... காரணம் என்ன தெரியுமா?
கார்களை சர்வீஸ் செய்ய இந்தியர்கள் செலவிடும் சராசரி தொகை குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது மந்தநிலை என்ற புயல் வீசி வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்தநிலையால், கடந்த சில மாதங்களாக வாகனங்கள் விற்பனை சரிவடைந்து கொண்டுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, வாகன டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களும் வேலை ஆட்களை குறைத்து வருகின்றன. இதன் விளைவாக கார் உரிமையாளர்கள் சர்வீஸ் பணிக்காக செலவிடும் தொகை குறைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சர்வே ஒன்றின் மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஜேடி பவர் 2019 இந்தியா கஸ்டமர் சர்வீஸ் இன்டெக்ஸ் (மாஸ் மார்க்கெட்) சர்வே தற்போது வெளியாகியுள்ளது. ஒரு ஆஃப்டர் சேல்ஸ் சர்வீசுக்கு செலவிடப்படும் சராசரி தொகையானது, கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது வாகன விற்பனையில் நிலவி கொண்டுள்ள மந்தநிலையே இதற்கு வித்திட்டுள்ளது.

அதாவது கடந்த 2018ம் ஆண்டு வாடிக்கையாளர்கள் ஒரு சர்வீஸ் விசிட்டிற்கு சராசரியாக 5,600 ரூபாய் செலவு செய்தனர். ஆனால் தற்போது அது 5,000 ரூபாயாக குறைந்துள்ளது. ஆஃப்டர் சேல்ஸ் வாடிக்கையாளர்களில் 39 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினர் செலவிடும் தொகை 17 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே இளம் வயதினர் என்றால், 7 சதவீதம் குறைந்துள்ளது.

வாகனங்களை சர்வீஸ் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் செலவிடும் தொகை குறைந்திருப்பது ஏன்? என உங்களுக்கு சந்தேகம் எழலாம். திருப்தியின்மையே இதற்கு காரணம். தற்போது வாகனங்களின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது. எனவே இதனை ஈடுகட்டும் விதமாக, பணியாளர்களின் எண்ணிக்கையை டீலர்ஷிப்கள் குறைத்து வருகின்றன.

அத்துடன் மற்ற செலவுகளையும் குறைத்து கொண்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தி கிடைப்பதில்லை. வாடிக்கையாளர்கள் வாகன சர்வீசுக்கு செலவிடும் தொகை குறைய இதுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேடி பவரின் இயக்குனர் மற்றும் இந்தியாவிற்கான தலைவரான கவுஸ்டவ் ராய் மேலும் சில கூற்றுக்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால் வாகனங்களை சர்வீஸ் செய்ய ஆகும் காலம் அதிகரித்துள்ளது'' என்றார். வாகன உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட சர்வீஸ் இடைவெளிகளை வழங்குவதும் கூட, வாகன சர்வீசுக்காக செலவிடப்படும் தொகை குறைய ஒரு காரணம்தான் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு சில நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் அழைப்பை விடுக்கின்றன. தயாரிப்பின் தரம் அதிகரித்திருப்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதுகுறித்து கவுஸ்டவ் ராய் கூறுகையில், ''இந்தியாவில் தயாரிப்பின் தரம் மேம்பட்டுள்ளது. எனவே குறைவான பிரச்னைகளே தீர்க்கப்பட வேண்டியுள்ளது'' என்றார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








