இந்தியாவில் மட்டுமல்ல... பாகிஸ்தான், சீனாவிலும் இதே நிலைமைதான்... கடுமையாக திணறுவது யார் தெரியுமா?
இந்தியாவை போன்று நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிலும், கார் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. குறிப்பாக கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியே திணறலுக்கு ஆளாகியுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

மாருதி சுஸுகி மட்டுமல்லாது அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் இந்தியாவில் வீழ்ச்சியைதான் சந்தித்து வருகிறது. இதுபோன்ற கடுமையான நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டுமானால், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM - Society of Indian Automobile Manufacturers) இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் ஆட்டோமொபைல் துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முடிவில் உறுதியாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அள்ளி வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இந்தியாவில்தான் கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக உள்ளது என்றால், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிலும் கூட இதே நிலைமைதான்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக ஹோண்டா நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது ஆலையில் 10 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருவதால், ஹோண்டா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் கூட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக கார் உற்பத்தியை குறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை தொடர்ந்து 5 மாதங்களாக உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளது. சரக்கு தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக மாருதி சுஸுகி இந்த நடவடிக்கையை எடுத்தது.

இந்த சூழலில் இண்டஸ் மோட்டார் கம்பெனியும் (Indus Motor Company - IMC) கூட 8 நாட்களுக்கு கார் உற்பத்தியை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. இண்டஸ் மோட்டார் கம்பெனிதான் பாகிஸ்தானில் டொயோட்டா கார்களை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச வரி, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானில் கார் விற்பனை சரிவடைந்து வருகிறது.

அதே நேரத்தில் உற்பத்தியை குறைப்பதா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக பாகிஸ்தான் சுஸுகி மோட்டார் கம்பெனி இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம் சீனாவில் 2019ம் ஆண்டின் முதல் பாதியில் வாகனங்கள் விற்பனை 12 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் விற்பனை வீழ்ச்சியடைந்து வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால் சீனாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 80 சதவீதம் என்கிற அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








