மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள்?
மின்சார வாகன விற்பனயை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கான பல புதிய திட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. ஃபேம் என்ற சிறப்பு மானியத் திட்டத்ததையும் நடைமுறைப்படுத்தியது. இதன்மூலமாக, மின்சார வாகனங்களின் விலையில் கணிசமான அளவு மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சியாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அல்லது சாலை வரியை குறைப்பதா என்பது குறித்து பரீசிலித்து வருகிறது.

மேலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் சாலை வரியில் கணிசமாக குறைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது மின்சார வாகனங்களுக்கு விலை அடிப்படையில் 4 முதல் 10 சதவீதம் சாலை வரியாக சில மாநிலங்களில் விதிக்கப்படுகிறது.

கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், பிற மாநிலங்களிலும் சாலை வரியில் அதிகபட்ச அளவு அல்லது முழு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.50 வரையிலும், தனிநபர் பயன்பாட்டு நான்குசக்கர வாகனங்களுக்கு ரூ.600 வரையிலும் பதிவுக் கட்டணம் உள்ளது. இதிலிருந்து விலக்கு அளிப்பது பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், இது நிச்சயம் மின்சார வாகனங்களின் விற்பனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சாலை வரி தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்ட பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








