கார் டீலர் மீது திடுக்கிடும் புகார்... இளம்பெண்ணின் கதறல் வீடியோ உலகம் முழுக்க வைரல் ஆனதால் சர்ச்சை
இளம்பெண் ஒருவரின் கதறல் வீடியோ உலகம் முழுக்க வைரல் ஆனதால், பிரபல கார் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளது.

ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது அதே ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் (Daimler) குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் உலகம் முழுக்க வைரல் ஆன ஒரு வீடியோ காரணமாக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷியான் (Xi'an) என்ற நகரில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சமீபத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். அவர் உண்மையில் முழு தொகையையும் செலுத்தி காரை டெலிவரி எடுக்கவே விரும்பியுள்ளார்.

ஆனால் டீலர்ஷிப்பில் இருந்த பணியாளர்கள், லோன் எடுத்து கொள்ளும்படி அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த வழியில் சென்றால் கட்டணம் அதிகம். இதனால் அந்த பெண் வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இருந்தபோதும் அதனை சகித்து கொண்டு, தனக்கு விருப்பமான மெர்சிடிஸ் பென்ஸ் காரை டெலிவரி எடுத்துள்ளார்.

ஆனால் அப்போது காரில் இருந்து ஆயில் கசிந்துள்ளது. ஷோரூம் தரையிலேயே ஆயில் கசிந்ததை பார்த்து, அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே அவர் மன உளைச்சலில் இருந்ததால், இம்முறை கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். உடனே காரின் பானெட் மீது ஏறி அமர்ந்து கொண்ட அவர், டீலர்ஷிப் பணியாளர்களிடம் மிக மிக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஷோரூம் பணியாளர்கள் தன்னிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக்கூறிய அவர், காருக்காக செலுத்தி பணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஷோரூம் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி உலகம் முழுக்க வைரல் ஆனது. Hao Bros. TV வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, சீன வாடிக்கையாளர்கள் கொந்தளித்தனர். கார் டீலர்ஷிப்களில் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதன் பின் சீன பத்திரிக்கைகளும் அந்த பெண் வாடிக்கையாளரை பேட்டி கண்டன. அப்போது மேற்கண்ட அனைத்து புகார்களையும் அந்த பெண் பகிரங்கமாக தெரிவித்தார்.

விவகாரம் விஸ்பரூம் எடுத்ததை தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பேரன்ட் குழுமமான டெய்ம்லரின் சீன நிர்வாகத்திற்கான தலைவர் மற்றும் போர்டு உறுப்பினரான ஹூபர்ட்டஸ் ட்ரோஸ்காஸ் கூறுகையில், ''நடந்த அனைத்து விஷயங்களுக்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்'' என்றார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''ஒரு உடன்பாட்டுடன் அந்த பெண் வாடிக்கையாளரை அணுகினோம். அவர் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளராகவே தொடர்வார்'' என்றார். ஷாங்காய் ஆட்டோ ஷோவின் முதல் நாளன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, இந்த தகவல்களை ஹூபர்ட்டஸ் ட்ரோஸ்காஸ் தெரிவித்தார்.

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் எவ்விதமான செட்டில்மெண்ட்டையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அந்த பெண் வாடிக்கையாளர்கள் சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என டெய்ம்லர் மற்றும் ஷியான் நகர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளரின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications