க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி!
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட்டில் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிஎஸ்ஏ குழுமம் சிட்ரோன் பிராண்டில் அறிமுகப்படுத்தும் முதல் கார் மாடல் என்பதால், இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆவலும் இருந்து வருகிறது.

இந்த சூழலில், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை யூரோ என்சிஏபி அமைப்பு அண்மையில் க்ராஷ் டெஸ்ட் நடத்தி ஆய்வு செய்தது. இதில், இந்த எஸ்யூவி சிறப்பான தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடலில் 6 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர்ஸ், லோடு லிமிட்டர்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் வசதிகள் இருந்தது.

இந்தநிலையில், மோதல் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் அதிகபட்சமான 38 புள்ளிகளுக்கு 33.4 புள்ளிகளை பெற்றது. அதேபோன்று, சிறியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 42.9 புள்ளிகளை பெற்று அசத்தியது.

மொத்தத்தில் 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இது சிறப்பான மதிப்பீடாகவே பார்க்கப்படுகிறது. இந்த காரில் இருக்கும் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் ஓரளவு சிறப்பாக இருந்ததாக யூரோ என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, முழு திருப்தியை வெளிப்படுத்தவில்லை.

எனினும், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தும் க்ராஷ் டெஸ்ட் சோதனையை விட யூரோ என்சிஏபி அமைப்பின் சோதனை கூடுதல் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்படுகிறது. எனவே, இதில், 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இதே சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை குளோபல் என்சிஏபி க்ராஷ் சோதனைக்கு உட்படுத்தினால் 5 ஸ்டார் ரேட்டிங் பெறுவதற்கான தகுதியானதாக இருக்கும்.

இந்த நிலையில், இந்தியாவிலும் வரும் அக்டோபர் முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. மேலும், பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், இந்த எஸ்யூவியை இந்தியாவில் புதிய க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தினால் கூட சிறப்பான தர மதிப்பீட்டை பெறும் என்று நம்பலாம்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பிரெஞ்ச் கார்களுக்கு உரிய வடிவமைப்பு தாத்பரியங்களுடன் வாடிக்கையாளர்களை கவர வருகிறது. இந்த எஸ்யூவியானது இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 130 எச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








