ஹூண்டாயை வம்புக்கு இழுக்கும் சிட்ரோன்: க்ரெட்டா மாடலுக்கான போட்டி கார் குறித்த தகவல் வெளியீடு...!
சிட்ரோன் நிறுவனம், அதன் மூன்றாவது இந்திய மாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலும் ஹூண்டாய் நிறுவனத்தின் காருக்கே போட்டியளிக்கும் வகையில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிஎஸ்ஏ குழுமத்தின், ஓர் அங்கமாக சிட்ரோன் செயல்பட்டு வருகின்றது. இது, இந்தியாவில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் முயற்சியில் அண்மைக் காலங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த, பல செய்திகளை, நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரக காரையே இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், இந்த புதிய மாடல் எஸ்யூவி வருகின்ற 2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது மாடலாக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட, காம்பாக்ட் ரக எஸ்யூவி காரை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

இந்நிலையில், மூன்றாவது மாடல் குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மூன்றாவது மாடலையும் எஸ்யூவி ரகத்திலேயே அந்த நிறுவனம், இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஆனால், அது நடுத்தர அளவுகொண்ட எஸ்யூவியாக இருக்கும் எனவும், ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அது அமையும் எனவும் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இந்த புதிய எஸ்யூவி கார், தற்போது சர்வதேச சந்தையில் விற்பனையில் இருக்கும் சி4 காக்டஸ் மாடலை ஒத்ததாக இருக்கும் என தெரிகின்றது.

அதேசமயம், முன்னதாக வெளிவர இருக்கும் எஸ்யூவி மாடல்கள் மட்டும் உள்நாட்டு சந்தையிலேயே வைத்து தயாரிக்கப்பட உள்ளன. ஆகையால், இந்தியச் சந்தையை மட்டும் கவனத்தில்கொண்டு இரு எஸ்யூவிக்களும் தயாராக இருக்கின்றன. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட இருக்கும், இந்த புதிய மாடல் எஸ்யூவி சர்வதேச சந்தை தரத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

இந்த நடுத்தர அளவுகொண்ட எஸ்யூவி காரில், காம்பேக்ட் எஸ்யூவி காரில் பொருத்தப்பட இருக்கும் அதே எஞ்ஜின்தான் பொருத்தப்பட உள்ளது. அவ்வாறு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் தேர்விலும் இந்த கார் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனிலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும் இந்த கார் கிடைக்கும்.

அதே சமயம் இந்த எஞ்ஜினில் சிறு ஹைபிரிட் தொழில்நுட்பமும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, வரும் காலத்தில் அமலுக்குள்ளாக இருக்கும் மாசு கட்டுப்பாட்டு விதி அல்லது ரியல்-வேர்ல்ட் டிரைவிங் எமிஸ்ஸன் விதியைச் சந்திக்க உதவும். அதேசமயம், காரின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

சிட்ரோன் அதன் பயணத்தை இந்தியாவில் வருகின்ற 2020ம் ஆண்டு முதல் தொடங்க உள்ளது. அந்தவகையில், இந்த நிறுவனம் களமிறக்க இருக்கும் சி5 ஏர்க்ராஸ் மாடல், அதன் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது. இதனை, டூஸான் மற்றும் காம்பஸ் நிறுவனங்களின் நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக களமிறக்க இருக்கின்றது.

இந்தியாவில் டூஸான் கார் சற்று அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியச் சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் நடுத்தர எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில், ஹூண்டாயின் டூஸான் காருக்கு கடுமையான போட்டியை வழங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
images are for representation purpose only


Click it and Unblock the Notifications








