டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரில் கெத்தாக வந்திறங்கிய முதலமைச்சர்... சிறப்பு தகவல்!
இன்னும் விற்பனைக்கே வராத, டாடா நிறுவனத்தின் புதிய ரக எலக்ட்ரிக் காரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கெத்தாக வந்திறங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், அண்மைக் காலங்களாக பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்கள், மின்வாகனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு எதிராகவும் பல்வேறுகட்ட நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைகள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக நடைபெறும் அறிவிக்கப்படாத போரைப் போன்று காட்சியளிக்கின்றது.
மேலும், தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்கள் அனைத்திற்கும் முழுக்கு போடுகின்ற வகையிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், மக்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில், அண்மையில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்த எலக்ட்ரிக் காரில் சட்டப்பேரவைக்கு வந்திறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல மாநில அரசுகள் இன்னும் மின் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையை வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
மேலும், முதலமைச்சர் நிதிஷ்குமார் வரும் காலங்களில் இந்த காரையேப் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து, அம்மாநில போக்குவரத்துத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறியதாவது, "மாநிலத்தில் மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருகின்றது. நாங்கள் அதற்கு எதிரானவர்கள். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே முதலமைச்சர் மின்சார காரைப் பயன்படுத்தியுள்ளார். அதேசமயம், எங்களின் இந்த நடவடிக்கை, மக்களையும் மின்சார காரைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் என நம்புகிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மாநிலத்தின் உள்ளூர் பகுதிகளுக்குச் செல்லும்போது, முதலமைச்சர் இனி இந்த எலக்ட்ரிக் காரையேப் பயன்படுத்துவார். எலக்ட்ரிக் கார்கள், மாசு இல்லாத மற்றும் ஒலி இல்லாத கார்களாகும். இவை, மாநிலத்தில் மாசு அளவைக் குறைக்க உதவும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து, "மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு 50 சதவீத மானியத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இது முதலமைச்சரின் சிறந்த முயற்சியாகும். மின்சார கார்களை வாங்கிய பின்னர் நுகர்வோருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில், மாநிலத்தின் பல பகுதியில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என அவர் கூறினார்.

மேலும், இதுகுறித்து காரின் ஓட்டுநரான கணேஷ்குமார் கூறுகையில், "இந்த மின்சார கார் சத்தமில்லாமல் இயங்குகின்று. அதேசமயம், ஓட்டவும் எளிதானதாக இருக்கின்றது. இந்த மின் வாகனத்தைப் பயன்படுத்துவதன்மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவொரு பின்விளைவும் ஏற்படாது. அந்தவகையிலான சிறப்பம்சத்தை இந்த கார் பெற்றிருக்கின்றது" என்றார்.

டாடா நிறுவனம் அதன் பிரபல மாடலான டிகோர் ரகத்தில் இந்த எலக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் ரூ. 9.99 - ரூ. 10.90 லட்சம் வரையிலான விலை நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

டாடா நிறுவனத்தின் இந்த டிகோர் எலக்ட்ரிக் காரில், 30kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. இது 41 எச்பி பவரையும், 105 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இதற்கான சக்தியை 16.2 kWh திறன் பேட்டரியில் இருந்து அதன் எஞ்ஜின் பெற இருக்கின்றது. மேலும், இது ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 142 கிமீ வரை செல்ல உதவும்.

அந்தவகையில், கணக்கிட்டால், இந்த காரில் பயணம் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு 80 பைசா மட்டுமே செலவாகும். இது மற்ற எரிபொருள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார் முதலில் வர்த்தக ரீதியிலான சந்தைக்கே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னரே தனியார் பயன்பாடு குறித்த தகவல் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








