தமிழகத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க டெஸ்லா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு!
தமிழகத்தில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கான திட்டமும் டெஸ்லா கார் நிறுவனத்திடம் உள்ளது.

டெஸ்லா கார் நிறுவனத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தின்போதே, அவர்கள் அமெரிக்கா சென்றபோது டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆலையை நேரில் பார்வையிட்டதுடன், இந்தியாவில் உற்பத்தி ஆலையை துவங்குவதற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், டெஸ்லா கார் ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை முதல்வர் பழனிச்சாமி மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் பழனிச்சாமி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் அடுத்ததாக தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும் அவர் பங்கேற்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அமெரிக்காவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு இருந்த டெஸ்லா மின்சார கார்கள், அதன் தொழில்நுட்பம் மற்றும் கார் உற்பத்தி முறைகள் குறித்து டெஸ்லா அதிகாரிகள் விளக்கினர். கார் ஆலையை சுற்றிப் பார்த்த அவர் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, டெஸ்லாவின் மின்சா கார் உற்பத்தி கட்டமைப்பை தமிழகத்தில் அமைக்க வருமாறு அவர் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், விரைவான அனுமதி மற்றும் சிறப்பு சலுகைகள் குறித்தும் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு உகந்த சூழல்கள் மற்றும் கார் உற்பத்திக்கு தேவையான மனித வளம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த டெஸ்லா அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
அமெரிக்க தொழில்முனைவோர் தமிழகத்தில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான டிஜிட்டல் ஆக்சிலரேட்டர் என்ற கட்டமைப்பை பயன்படுத்தி எளிதாக அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கான வாய்ப்புகளையும், புதிய தொழில்முனைவோருக்கான முதலீட்டில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் சென்னையில் உள்ள கார் ஆலையில் கோனா மின்சார கார் உற்பத்தியை துவங்கியது. அத்துடன், அதனை முதல்வர் பழனிச்சாமிதான் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








