பெங்களூரில் இந்த விஷயத்தை எப்படியாவது பிரபலமாக்க தீவிர முயற்சி... இதற்காக செய்யப்போவது இதுதான்...
பெங்களூரில் சிஎன்ஜி வாகனங்களை பிரபலமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG - Compressed Natural Gas) மூலம் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து வருகின்றன. சிஎன்ஜி வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அத்துடன் அவற்றை இயக்குவதற்கு ஆகும் செலவும் ஓரளவிற்கு குறைவுதான்.

எல்பிஜி (LPG) வெர்ஷனுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி ஆட்டோவை இயக்குவதற்கு ஆகும் செலவு 42 சதவீதம் குறைவு. அதே சமயம் டீசல் மாடல்களை காட்டிலும், சிஎன்ஜி ரக கார்கள் அதன் உரிமையாளர்களுக்கு 16 சதவீத தொகையை மிச்சம் பிடித்து கொடுக்கும். இதுவே சிஎன்ஜி மூலம் இயங்கும் இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ்கள் என்றால், முறையே 25 மற்றும் 10 சதவீத தொகை சேமிக்கலாம்.

தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான வாகனங்களை, சிஎன்ஜிக்கு மாற்ற முடியும். இதற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு 28 ஆயிரம் ரூபாயும், ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 24 ஆயிரம் ரூபாயும் செலவு ஆகும். ஆனால் நீங்கள் சிஎன்ஜிக்கு மாற விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட மையங்களை அணுகுவதே சிறந்தது.

இந்த சூழலில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இயங்கும் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை கடந்துள்ளதாக கெயில் கேஸ் (GAIL Gas) தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரில் தற்போது 1,085 வாகனங்கள் சிஎன்ஜி மூலம் இயங்கி வருகின்றன. இதில், 840 கார்கள், 220 ஆட்டோ ரிக்ஸாக்கள், 5 இரு சக்கர வாகனங்கள் அடக்கம். எஞ்சிய 20 வாகனங்கள் இதர வகையை சேர்ந்தவை.

தற்போது பெங்களூர் நகரில் 8 சிஎன்ஜி ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. அவை செயல்படும் இடங்கள் பின்வருமாறு: பிரேம் நகர், ஏபிசி சர்க்கிள் (ஜிகானி), கேஐஏ அருகே உள்ள ஹார்ட்வேர் பார்க், பீனயா, சுங்கதகட்டே, பொம்மசந்திரா-ஜிகானி லிங்க் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு (அகரா ஏரி அருகே) மற்றும் டாடா நகர்.

இவை தவிர கேஆர் புரம், சர்ஜாபுர் சாலை, கட்டினங்ஹள்ளி, ஆனேக்கல், விருபாக்ஸபுரா, பொம்மசந்திரா, பன்னேர்கட்டா சாலை, மகடி சாலை மற்றும் பனசங்கரி உள்பட பெங்களூர் நகரில் மொத்தம் 12 புதிய சிஎன்ஜி ஸ்டேஷன்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. இவ்விடங்களில் அமையவுள்ள சிஎன்ஜி ஸ்டேஷன்களின் வர்த்தக ரீதியிலான செயல்பாடு நடப்பு மாத இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கொல்லஹள்ளி மற்றும் துர்வானிநகர் ஆகிய இடங்களில், அடுத்த 2-3 மாதத்திற்குள், 2 புதிய சிஎன்ஜி ஸ்டேஷன்கள் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்கு உள்ளாக 25 புதிய சிஎன்ஜி ஸ்டேஷன்களை அமைக்கவும் கெயில் கேஸ் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் மொத்த எண்ணிக்கையை 50க்கும் மேலாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத், இந்தூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிக சிஎன்ஜி ஸ்டேஷன்கள் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம், பெங்களூரும் மேற்கண்ட நகரங்களுடனான போட்டியில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் நகரில் தற்போது சுமார் 80 லட்சம் வாகனங்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதில், சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 1,085தான். எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை, ஃபில்லிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை, போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகிய காரணங்களால்தான், பெங்களூர் நகரில் சிஎன்ஜி வாகனங்கள் இன்னும் பிரபலமடையவில்லை என அத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








