3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...
3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு, மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார்.

மதுரை கப்பலூர் பகுதியில் பெஸ்ட் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற யூஸ்டு கார் டீலர்ஷிப் (Used Car Dealership) செயல்பட்டு வருகிறது. இங்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே மதுரையை சேர்ந்த சுதா என்பவர், பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ஹேட்ச்பேக் வகை கார் ஒன்றை, கடந்த 2013ம் ஆண்டு வாங்கினார். இந்த கார் அதன் உரிமையாளரால், 3 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.

இந்த சூழலில்தான் சுதா அந்த காரை 3.40 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் வாங்கிய ஒரு சில நாட்களில் கார் அடிக்கடி பழுதாக தொடங்கியது. அத்துடன் ஒரு நாள் திருமங்கலம் டோல்கேட் அருகே திடீரென பிரேக் டவுன் ஆகி அப்படியே நின்று விட்டது.
உடனடியாக கார் வாங்கிய பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை சுதா அணுகினார். இதன்பேரில் திருமங்கலம் டோல்கேட் வந்த அவர்கள் காரை டோ (Tow) செய்து, தங்கள் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சில மாதங்களை கடந்த பின்பும் கூட அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
காரை அவர்கள் திருப்பி வழங்கவில்லை. அத்துடன் காரை வாங்குவதற்காக சுதா கொடுத்த 3.40 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் சுதா அதிர்ச்சியடைந்தார். அப்போது சுதாவிற்கு நெருக்கமான சிலர், அந்த டீலரை மீண்டும் அணுகி காரை விற்பனை செய்து விடும்படி ஆலோசனை வழங்கினர்.

ஆனால் அதற்கு மாறாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியாக வேண்டும் என சுதா நினைத்தார். எனவே உடனடியாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (District Consumer Disputes Redressal Forum-DCDRF) அவர் அணுகினார்.
சுதா தாக்கல் செய்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்றம் தீவிர விசாரணை நடத்தியது. இதன் முடிவில் ரிப்பேருக்கு அப்பாற்பட்டு, குறைபாடுகளுடன் கூடிய கார் சுதாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் குறைதீர் மன்றம் உறுதி செய்தது.
எனவே குறைபாடுகளுடன் கூடிய காரை விற்பனை செய்ததற்காக, சுதாவிற்கு ரூ.3.95 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதில், 3.40 லட்ச ரூபாய் காரை வாங்கியதற்காக சுதா செலுத்திய பணமாகும். அதனை திருப்பி வழங்கும்படி நுகர்வோர் குறைதீர் மன்றம் கூறியுள்ளது. அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 55 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ரூ.3.95 லட்சம் வழங்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான யூஸ்டு கார் டீலர்கள் இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
செகண்ட் ஹேண்டில் கார் வாங்கிய பின்பு அதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து யூஸ்டு கார் டீலர்களிடம் கேட்டால், ''இது பயன்படுத்தப்பட்ட கார். இதை வாங்குவதில் உள்ள 'ரிஸ்க்' என்ன என்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் என்ன செய்வது'' என கூலாக பதில் சொல்லி விடுகின்றனர். எனவே செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Note: Image for representative purpose only.


Click it and Unblock the Notifications









