ஒரு வருடம் கார் ஓட்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை... யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா?
பிரபல கிரிக்கெட் வீரர் ஒரு வருடத்திற்கு கார் ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையைப் பெற்ற அதிர்ஷ்டசாலி யார்...? எதற்காக இத்தகைய தண்டனையைப் பெற்றார் என்பதுகுறித்த முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன். ஸ்பின் பந்து வீச்சில் லெஜண்ட் (சுழற் பந்து) என போற்றப்படும் இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார்.

இவர், பந்து வீச்சு மட்டுமின்றி காரையும் எப்போதும் அதிவேகமாக இயக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகின்றது. அவ்வாறு, அவர் காரை அதிவேகமாக இயக்கியதன் காரணமாக, தற்போது ஒரு வருடத்திற்கு காரை இயக்க ஷேன் வார்னுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

ஷேன் வார்ன் ஒரு முறை காரை அதிவேகமாக இயக்கியதன் காரணமாக இந்த தண்டனையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஏனென்றால், இதற்கு முன்பாகவும் அவர், பல முறை காரை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். இதன் காரணமாகவே, இத்தகைய நடவடிக்கையை இங்கிலாந்து அரசு அவர்மீது மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனின் மேற்கு பகுதியில் வசிக்கும் ஷேன் வார்ன், ஜாகுவார் கார் ஒன்றை வாடகை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் 64 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பயணித்துள்ளார். இதன் காரணமாக, போலீஸாரிடம் சிக்கிய அவர்மீது வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்று, அவர் கடந்த 2016இல் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு வரைக்குள்ளாக 6 முறை வேக வரம்பை மீறி காரை இயக்கியுள்ளார்.
ஆகையால், லண்டன் நீதிமன்றம் அந்நாட்டு மதிப்பில் 1,845 பவுண்டுகள் அபராதம் விதித்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.62 லட்சம் ஆகும். இத்துடன், 12 மாதங்களுக்கு கார் இயக்குவதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஷேன் வார்ன், தற்போது அவரது சொந்த வணிகத்தை மேற்கொண்டு வருகின்றார். இதன்காரணமாகவே, அவர் ஜாகுவார் காரை எடுத்து லண்டனில் தங்கி வருகின்றார். இந்தநிலையில்தான், அவர் இத்தகைய சட்ட சிக்கலைச் சந்தித்துள்ளார். இதனால், அடுத்து வரும் 12 மாதங்களுக்கு அவர் காரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனங்களை இயக்குவது என்பது பல வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய போக்குவரத்து குற்றமாக பார்க்கப்படுகின்றது. அதிலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன. இதன்வெளிப்பாடாகவே, ஷேன் வார்னுக்கு இத்தகைய அதிகபட்ச தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில், அந்த வாகன ஓட்டியின் ஓட்டுநர் முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகைய கடுமையான சட்டத்தின்காரணமாகவே, இந்தியிாவைக் காட்டிலும் அந்த நாடுகளில் விபத்துகள் மிக குறைவாக நடைபெறுகின்றன.


Click it and Unblock the Notifications








