பெட்ரோல், டீசல் எஞ்சின்களுக்கு குட்பை சொல்ல டெய்ம்லர் முடிவு!
பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விடை கொடுக்க டெய்ம்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமங்களில் ஒன்று டெய்ம்லர். பஸ், டிரக் வேன் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களும், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்களையும் டெய்ம்லர் குழுமம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்ற நிறுவனமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுப்பெற்று வருவதை மனதில் வைத்து பல அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதற்கான திட்டங்களை டெய்ம்லர் குழுமம் வகுத்துள்ளது.

அதற்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனத் தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதாவது, பஸ், டிரக், வேன் மற்றும் சொகுசு கார்கள் என அனைத்தையும் மின்சார மாடல்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பேட்டரியில் இயங்கும் பஸ், வேன் மற்றும் டிரக்குகளை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டது டெய்ம்லர் குழுமம். அடுத்ததாக மின்சார சொகுசு கார்கள் தயாரிப்பில் அதீத கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரும் முதலீட்டு திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.

தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் EQS, EQB மற்ரும் EQC ஆகிய மின்சார சொகுசு கார் மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த கார் மாடல்களை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி சந்தைக்கு கொண்டு வரும் முனைப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், தற்போது தனது சொகுசு கார்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கோ அல்லது புதிதாக உருவாக்குவதற்கான திட்டங்களை கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களை செம்மை படுத்தும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டு முதல் தற்போது விற்பனையில் உள்ள சொகுசு கார்களின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்வதற்கு டெய்ம்லர் முடிவு செய்துள்ளது. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் மாடல்கள்தான் டெய்ம்லரின் கடைசி தலைமுறை மாடல்களாக இருக்கும்.
Source: Auto Motor und Sport


Click it and Unblock the Notifications








