அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதலமைச்சர் அதிரடி உத்தரவு... எங்கு தெரியுமா?
அக்டோபர் 29ம் தேதி முதல் பெண்கள் டிடிசி மற்றும் க்ளஸ்டர் பேருந்துகளில் இலவச பயணிக்கும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெண்களின் பெருமையை போற்றாத நாடே இந்த உலகில் இல்லை என நம்மால் உறுதிபட கூற முடியும். ஒவ்வொரு நாடும் அதன் முக்கியத்துறைகளில் பெண்களின் பங்களிப்பு இருக்கும் விதமாக அவர்களுக்கு முக்கியப் பொருப்புகளைக் கொடுத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றன.
அதிலும், தற்போதைய நவீன கால கட்டத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கின்றது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் மன உறுதி கொண்டவர்கள் என கூறப்படுவதுண்டு. அதற்கேற்ப வகையில் ஆண்களுக்கு சமமாகவும், பல நேரங்களில் ஆண்களைவிட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். ஆனால், இவர்களை ஆண்கள் சமூதாயம் எப்போதுமே கொத்தடிமையாகவே அடக்கி ஆண்டு வருகின்றது. இருப்பினும், ஒவ்வொரு பெண்களும் சமூகத்தில் முன்னேறுதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொருளாதாரம் ஓர் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அன்றாடம் பெண்கள் பயணிக்கும் செலவினை ஏற்றுக் கொள்ளும் விதமான முயற்சியினை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான, அறிவிப்பைதான் அது நேற்று வெளியிட்டது.

அதில், "வருகின்ற அக்டோபர் 29ம் தேதி முதல் டெல்லி போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்து மற்றும் க்ளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்" என அறிவித்துள்ளது.

முன்னதாக, இதுகுறித்த அறிக்கையை டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், "அரசு பேருந்து மற்றும் மெட்ரோ கட்டணம் காரணமாக பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் சிறிய தொகையும் அதிக கட்டணத்தினால் வீணாகின்றது. இதற்கு தீர்வு காணும் விதமாக, பெண்களுக்கான இலவச பயண திட்டம் கொண்டு வரப்படுகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், "இத்திட்டத்திற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதற்கு செலவாகும் தொகையை மாநில அரசும், மத்திய அரசும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகையால், இத்திட்டத்திற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் டெல்லி அரசே தனித்து நின்று ஏற்க முடிவு செய்துள்ளது. நமக்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை" என கூறியிருந்தார்.

தொடர்ந்து, "இலவச பயணத்தை விரும்பாத மற்றும் வசதியுள்ள பெண்கள் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு பயணிக்கலாம். இதற்கு தடை ஏதும் இல்லை" என தெரிவித்தார்.
டெல்லி பேருந்துகளில் நாள்தோறும் பயணிக்கும் 30 லட்சம் பேரில் 25 சதவீதம்பேர் பெண்கள் என கூறப்படுகின்றது. ஆகையால், இத்திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 700 கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என தெரிகின்றது.

மேலும், இத்திட்டத்திற்காக ரூ.479 கோடி ஒதுக்கப்பட இருப்பதாக அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் மணிஷ் சிஷோடியா தெரிவித்தார். அதில், முதல்கட்டமாக ரூ. 140 கோடி வழங்கப்பட உள்ளது.

இதில், 90 கோடி ரூபாய் டிடிசி போக்குவரத்து கழகத்திற்கும், 50 கோடி ரூபாய் க்ளஸ்டர் பேருந்துகளுக்கும் வழங்கப்பட இருப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி மெட்ரோ ரயில்களிலும் இலவச பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியிலும் அம்மாநில அரசு செயல்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








