கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பரிதாப பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...
இன்று அதிகாலை நடைபெற்ற கார் விபத்தில், பிரபல கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக டெல்லி பல்கலைக்கழகம் (Delhi University) திகழ்ந்து கொண்டுள்ளது. இதில், ஷிவம் ஷங்கர் என்ற மாணவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது.

ஷிவம் ஷங்கரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் மத்திய டெல்லி அருகே உள்ள கரோல் பாக் (Karol Bagh) என்ற பகுதியில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஷிவம் ஷங்கரின் நண்பர்களான கஷிஷ் (18), நிதின் (18), அர்னேஷ் ஷங்கர் ஆகியோர் வந்திருந்தனர்.

இதில், கஷிஷ் மற்றும் நிதின் ஆகியோர் சண்டிகரை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அர்னேஷ் ஷங்கர் கரோல் பாக் பகுதியை சேர்ந்தவர்தான். இந்த சூழலில் திருமணம் முடிந்த பிறகு, அருகே உள்ள முர்தல் என்ற பகுதிக்கு காரில் ஜாலியாக ஒரு ரைடு சென்று விட்டு வரலாம் என நான்கு பேரும் நினைத்தனர்.

உடனே ஹூண்டாய் சான்ட்ரோ காரை எடுத்து கொண்டு 4 பேரும் புறப்பட்டு விட்டனர். ஷிவம் ஷங்கர் காரை ஓட்டி சென்றார். சரியாக இன்று (ஜனவரி 24) அதிகாலை 3 மணியளவில் சரய் ரோஹில்லா என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் கார் திடீரென பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதனால் காருக்குள் இருந்த 4 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஷிவம் ஷங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் மூலம் நான்கு பேரும் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான குடிபோதையே இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஷிவம் ஷங்கர் காரை அதிவேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். குடிபோதை, மிதமிஞ்சிய வேகம் ஆகிய காரணங்களால்தான், கார் ஷிவம் ஷங்கரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன்பின் டிவைடரில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குடிபோதையில் வாகனங்களை இயக்குவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இளைஞர்களும் குடிபோதையில் வாகனங்களை இயக்கி விபத்தில் உயிரிழப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனங்களை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு இந்தியாவில் உரிய தண்டனை வழங்கப்படுவதில்லை.

இதனால் ஏற்படும் அலட்சியம் காரணமாகதான், பலர் குடிபோதையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல. அவர்களுடன் சேர்த்து சாலையில் பயணிக்கும் மற்ற அப்பாவி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சட்ட, திட்டங்களை மிக கடுமையாக்கினால் மட்டுமே குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதுதவிர வாகன ஓட்டிகள் தாங்களாகவே முன்வந்து, குடிபோதையில் வாகனம் இயக்குவதை தவிர்த்தாலும் விபத்துக்கள் கட்டுக்குள் வரும்.

இதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்த நேரிட்டால், மீண்டும் வீடு திரும்ப ஓலா, உபேர் போன்ற கால் டாக்ஸி சேவைகளை பயன்படுத்தலாம். ஓலா, உபேர் நிறுவனங்கள் தற்போது பெரும்பாலான நகரங்களில் தங்கள் சேவையை விரிவுபடுத்தி விட்டன.

மொபைல் ஆப் (Mobile App) மூலம் மிக எளிதாக ஓலா மற்றும் உபேர் கால் டாக்ஸிகளை புக் செய்து விட முடியும். நீங்கள் இருக்கும் இடத்திற்கே மிக விரைவாக டாக்ஸி வந்து விடும். இதன்மூலம் மிக குறைவான கட்டணத்தில் வீட்டு வாசலுக்கே சென்று இறங்கி கொள்ளலாம்.

ஒருவேளை ஓலா மற்றும் உபேர் போன்ற டாக்ஸிகளின் சேவை இல்லாவிட்டால், பஸ் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் நீங்கள் வாகனம் இயக்குவது தவிர்க்கப்படும்.

இதற்கு வசதியாக மது அருந்த செல்லும் முன்பு டூவீலர் மற்றும் கார் போன்ற உங்களது வாகனத்தை நீங்கள் வீட்டிலேயே விட்டு விட்டு வரலாம். ஆனால் இதை செய்ய வேண்டுமென்றால், மது அருந்த செல்லும் முன்பு நன்கு திட்டமிட்டு கொள்வது அவசியமானது.

அதாவது நீங்கள் மது அருந்த செல்லும் இடத்தில் இருந்து வீடு திரும்புவதற்கான பாதையில், கால் டாக்ஸி, பஸ், ரயில் சேவைகள் உள்ளனவா? எவ்வளவு நேரம் வரை இந்த சேவை கிடைக்கும்? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவு செய்யுங்கள்.

அல்லது வாகனத்தை எடுத்து சென்றே ஆக வேண்டுமென்றால், அதற்கென தனியாக டிரைவரை நியமனம் செய்யுங்கள். அவர் உங்களை பத்திரமாக வீட்டில் சேர்த்து விடுவாரா? என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். மது அருந்தும் பழக்கமில்லாத உங்கள் நண்பரை இதற்கு தேர்வு செய்வது நல்லது.

மது அருந்திய பிறகு மூளையின் செயல்பாடுகள் வெகுவாக குறைந்து விடும். இதன் காரணமாக அந்த சமயத்தில் முடிவுகளை எடுக்க முடியாது. எனவே மது அருந்துவதற்கு முன்பாகவே மேற்கண்டவை தொடர்பான முடிவுகளை எடுத்து விடுங்கள். இவை எல்லாவற்றையும் விட மது அருந்துவதை தவிர்ப்பதுதான் நல்ல முடிவாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








