சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்... இந்தியாவையே பிரம்மிக்க வைத்த மஹிந்திரா... என்னவென்று தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோகம் அப்பியிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் முகத்தில் தற்போது சிறிய மகிழ்ச்சியை நம்மால் காண முடிகிறது. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வாகனங்களின் விற்பனை சரிவு, வாகனங்களின் உற்பத்தி குறைப்பு மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது போன்ற செய்திகளையே தினசரி கேட்டு கொண்டிருந்த மக்கள் தற்போது சற்று வித்தியாசமான செய்திகளை கேட்க தொடங்கியுள்ளனர்.

ஆம், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் வரலாறு காணாத சாதனை எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளன. தீபாவளி பண்டிகை காலமே இதற்கு முக்கிய காரணம். இதனால் கார் நிறுவனங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளன.

தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு வரை இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடுமையான மந்தநிலை நிலவி வந்தது. வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்ததால், கார் நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து கொண்டன. பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கின.

ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு, முன்னணி நிறுவனங்கள் பிரம்மிக்க வைக்கும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்துள்ளன. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் தந்திராஸ் தினத்தில் 45 ஆயிரம் கார்களை டெலிவரி செய்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இவ்வளவு அதிக கார்களை டெலிவரி செய்ததில் மாருதி சுஸுகி புதிய சாதனையை படைத்துள்ளது.

அதே சமயம் மாருதி சுஸுகியின் போட்டி நிறுவனமான ஹூண்டாய் தந்திராஸ் தினத்தில் 12,500 கார்களை டெலிவரி செய்துள்ளது. சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தந்திராஸ் தினத்தில் 600 கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு புது வரவான கியா மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களும் தந்திராஸ் டெலிவரியில் அசத்தியுள்ளன.

இதன்படி தந்திராஸ் நாளில் கியா நிறுவனம் 2,138 செல்டோஸ் கார்களையும், எம்ஜி நிறுவனம் 700 ஹெக்டர் கார்களையும் டெலிவரி செய்துள்ளன. கியா மற்றும் எம்ஜி ஆகிய 2 நிறுவனங்களும் முறையே செல்டோஸ் மற்றும் ஹெக்டர் ஆகிய கார்களை மட்டுமே தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் நிரூபித்துள்ளது. தந்திராஸ் தினத்தில் மஹிந்திரா நிறுவனம் 13,500 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. மாருதி சுஸுகியை போல், ஒரே நாளில் அதிக வாகனங்களை டெலிவரி செய்ததில் மஹிந்திரா நிறுவனமும் சாதனை படைத்துள்ளது.

கடந்தாண்டு தந்திராஸ் தினத்தை காட்டிலும் நடப்பாண்டு தந்திராஸ் தினத்தில் மஹிந்திரா நிறுவனம் அதிக வாகனங்களை டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ஒன்றும் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பிறகு இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தந்திராஸ் தினத்தில் 12,500 கார்களை மட்டுமே டெலிவரி செய்துள்ளது.

ஆனால் மஹிந்திரா அதை விட அதிகமான வாகனங்களை தந்திராஸ் நாளில் டெலிவரி செய்துள்ளது. ஒரு வேளை மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களையும் டெலிவரி டேட்டாவில் சேர்த்திருக்கலாம். அதுவே இதற்கு காரணமாகவும் இருக்கலாம். இதுதவிர மற்றொரு ஆச்சரியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது.

அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையும், தந்திராஸ் நாளில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளன. மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 13,963 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








