இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த 60 வயது மாற்றுத்திறனாளி.. என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
60 வயது மாற்றுத்திறனாளி ஒருவர், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார்? என தெரிந்தால், நீங்கள் திகைத்து போவது உறுதி.

உலக அளவில் சாதனை படைக்க ஊனமும், வயதும் ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் விஷ்ணு பட்டேல். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த விஷ்ணு பட்டேல் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது.

இந்த சூழலில் உடல் குறைபாடு, வயது என்ற இரு பெரும் தடைகளை கடந்து, விஷ்ணு பட்டேல் படைத்துள்ள சாதனை ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது கண்டுபிடிப்புகள் மூலம், மெத்த படித்த ஆட்டோமொபைல் இன்ஜினியர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளார் விஷ்ணு பட்டேல்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் போதிய அளவிற்கு பயிற்சியோ அல்லது பணமோ இல்லாத சூழலிலும், சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை தனி ஒருவராக விஷ்ணு பட்டேல் உருவாக்கியுள்ளதால், ஆட்டோமொபைல் இன்ஜினியர்களே திகைத்து போயுள்ளனர்.

மக்கள் வேண்டாம் என குப்பையில் தூக்கி எறியும், எலெக்ட்ரானிக் பொருட்களின் மூலம் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை விஷ்ணு பட்டேல் உருவாக்கியுள்ளார். இதுதான் விஷ்ணு பட்டேல் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் முக்கியமான சிறப்பம்சமே.

இதுவரை ஒட்டுமொத்தமாக 7 இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விஷ்ணு பட்டேல் உருவாக்கியுள்ளார். இவை அனைத்தும் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். அத்துடன் எலெக்ட்ரானிக் குப்பைகள் மூலமாக தயாரிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குப்பையில் வீசப்படும் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள், டிவி ரிமோட்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் ஆகியவற்றின் மூலம்தான் இந்த 7 எலெக்ட்ரிக் வாகனங்களையும் விஷ்ணு பட்டேல் உருவாக்கியுள்ளார்.

தற்போது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகப்படியாக உள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே உலகின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி வருகிறது.

இந்த சூழலில், எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் விஷ்ணு பட்டேல் தயாரித்துள்ள எலெக்ட்ரானிக் வாகனங்கள் கவனம் ஈர்த்துள்ளன. இதுகுறித்து விஷ்ணு பட்டேல் கூறுகையில், ''எனக்கு 20 லட்ச ரூபாய் கடன் கொடுத்தால், இந்தியாவிற்கு பெருமிதம் சேர்க்கும் வாகனங்களை என்னால் உருவாக்க முடியும்.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என தற்போது வரை 7 வாகனங்களை உருவாக்கியுள்ளேன். இவை அனைத்தும் பேட்டரியில் இயங்க கூடிய எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். மோசமான வாயுக்கள் எதையும் இவை உமிழாது. எனவே இந்த வாகனங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.

மக்கள் குப்பைகளை வீசுகின்றனர். ஆனால் நான் அவற்றை வாகனங்களாக மாற்றி விட்டேன். என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று சக்கர வாகனங்களை உருவாக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்றார்.

விஷ்ணு பட்டேல் கேட்பது வெறும் 20 லட்ச ரூபாய்தான். அதுவும் கடனாகதான். எவ்வித பண உதவி மற்றும் பயிற்சியும் இன்றி, 7 வாகனங்களை விஷ்ணு பட்டேல் உருவாக்கி விட்டார். இந்த சூழலில், 20 லட்ச ரூபாய் கடனாக கிடைத்தால், அவரால் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்க முடியும்.
பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி போன்றவர்களுக்கு அள்ளி அள்ளி கடன் கொடுக்கும் வங்கிகள், இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு உதவி செய்யுமா? என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications








