வெறித்தனம்... நேற்று ஒரே நாளில் ஹூண்டாய், கியா நிறுவனங்கள் டெலிவரி செய்த கார்கள் எவ்வளவு தெரியுமா?
தீபாவளி பண்டிகை காலம் எதிரொலியாக ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் நேற்று ஒரே நாளில் மிக பிரம்மாண்ட எண்ணிக்கையில் கார்களை டெலிவரி செய்துள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது மந்தநிலை நிலவி வருகிறது. எனவே கடந்த சில மாதங்களாக கார் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இதனால் கார் நிறுவனங்கள் அனைத்தும் கவலையில் ஆழ்ந்துள்ளன. எனினும் தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் கார் நிறுவனங்களின் முகத்தில் சிறிய மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.

ஒரு சில முன்னணி நிறுவனங்கள் நேற்று (அக்.25), மிகப்பெரிய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்துள்ளன. இதில், ஹூண்டாய் நிறுவனம் நேற்று ஒரே நாளில் 12,500 கார்களை டெலிவரி செய்துள்ளது. ஒரே நாளில் 12,500 கார்களை டெலிவரி செய்திருப்பது ஹூண்டாய் நிறுவன ஊழியர்கள் கொண்டாட வேண்டிய ஒரு விஷயம்தான்.

ஆனால் எந்தெந்த கார்கள் எவ்வளவு எண்ணிக்கையில் டெலிவரி செய்யப்பட்டன? என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவில் மற்ற கார் நிறுவனங்களை போலவே ஹூண்டாய் நிறுவனமும் தற்போது விற்பனையில் தள்ளாடி வருகிறது. 2019ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 8.37 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஹூண்டாய் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2019ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஹூண்டாய் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டால், நடப்பு ஆண்டை ஒற்றை இலக்க விற்பனை வீழ்ச்சியுடன் நிறைவு செய்யும். நடப்பாண்டின் ஜனவரி-செப்டம்பர் காலகட்டத்தில் 3,77,702 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 17.18 சதவீத மார்க்கெட் ஷேரை ஹூண்டாய் நிறுவனம் கைவசம் வைத்துள்ளது.

விற்பனையில் தள்ளாடினாலும் கூட, ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் மேம்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில், அந்த நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 15.77 சதவீதமாக மட்டுமே இருந்தது. மறுபக்கம் கியா நிறுவனமும் நேற்று பிரம்மாண்ட எண்ணிக்கையில் கார்களை டெலிவரி செய்துள்ளது.

கியா நிறுவனம் நேற்று 2,184 செல்டோஸ் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்துள்ளது. விற்பனை குறைவால் மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து கொண்டு தடுமாறி வருகின்றன. ஆனால் மறுபக்கம் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கதை வேறு மாதிரியாக உள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவிக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

செல்டோஸ் காருக்கு வேகமாக வளர்ந்து வரும் டிமாண்ட்டை சரியாக சமாளிக்க முடியாமல் கியா நிறுவனம் தடுமாறுகிறது. இது மற்ற நிறுவனங்களுக்கு பொறாமையாக கூட இருக்கலாம். தேவையை சரியாக பூர்த்தி செய்யும்விதமாக செல்டோஸ் எஸ்யூவி காரின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க கியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே கியா மோட்டார்ஸ் நிறுவனம் கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரை வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதுதவிர புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை களமிறக்கும் திட்டமும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. இந்த கார் 2020ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








